திருச்செந்தூர் முருகன் கோவில் பணிகள் குறித்து வேகமாக பரவும் தவறான தகவல்.. கோவில் நிர்வாகம் விளக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகம் அமைக்கும் பணிகள் 2 கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் (வாமசுந்தரி இன்வெஸ்ட்மன்ஸ் டெல்லி பி.லிட்) மூலம் ரூ.200 கோடி மதிப்பில் உபயமாக பணிகள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்டமாக, கோவில் நிதி மூலம் ரூ.100 கோடி மதிப்பீல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற திருக்கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகிறது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகும்.157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிமாகி வருகிறது.கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வந்து செல்லும் இடமாக திருச்செந்தூர் இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிக பக்தர்கள் எப்போதும் வந்து செல்ல விரும்பும் கோயிலாக திருச்செந்தூர் முருகன் கோயில் இருக்கிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அதிகப்படுத்த பல்வறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவிலிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது; "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகம் அமைக்கும் பணிகள் 2 கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் (வாமசுந்தரி இன்வெஸ்ட்மன்ஸ் டெல்லி பி.லிட்) மூலம் ரூ.200 கோடி மதிப்பில் உபயமாக பணிகள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்டமாக, கோவில் நிதி மூலம் ரூ.100 கோடி மதிப்பீல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹெச்.சி.எல். நிறுவனம் மூலம் நடைபெறும் முதற்கட்ட பணிகளுக்கு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலம் ரூ.171 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை முழுவதும் அந்த நிறுவனம் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் செலவிடப்படும் தொகை ஆகும். அந்த தொகைக்கு அவர்களது பட்டய கணக்காயர்களால் தணிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. ஆனால் வரைபடம் தயாரிக்க ரூ.8 கோடி செலவிடப்பட்டுள்ளது என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
மேற்படி அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாக அனுமதி தொகையானது, கோவில் நிதியிலிருந்தோ அல்லது அரசின் நிதியிலிருந்தோ வழங்கப்படவில்லை. பக்தர்களின் நலனுக்கான அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்வதற்காக உபயதாரர் பங்களிப்பு மூலம், அவர்களாலேயே நேரடியாக செலவு செய்யப்பட்டு அவர்களது நேரடி கண்காணிப்பில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications