சாலை விபத்தில் தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் பலி! முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சென்னை: தினபூமி நாளிதழின் முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றிய திருநாவுக்கரசு உடல் நலக்குறைவால் காலமான நிலையில், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்ற தினபூமி உரிமையாளர் மணிமாறன் கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினபூமி, அதிர்ஷ்டம் ஆகிய நாளிதழ்களின் முதன்மை செய்தி ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதுரை தினபூமி நாளிதழின் முதன்மை செய்தி ஆசிரியரான திருநாவுக்கரசு.

இந்நிலையில் நேற்று அதிகாலை தோவாளையில் உடல் நலக்குறைவால் காலமான நிலையில், அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை 5 மணி அளவில் தோவாளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
அவரது இறுதி நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளார் தினபூமி நாளிதழின் உரிமையாளரான மணிமாறன். பின்னர் காரிம் தனது மகன் ரமேஷுடன் காரில் வீடு திரும்பியுள்ளார். திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி கார் சென்று கொண்டிருந்த நிலையில் மணிமாறனின் மகனான ரமேஷ் குமார் காரை இயக்கியதாக கூறப்படுகிறது.
மாலை 5 மணி அளவில் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் மேம்பாலத்தில் வந்த போது ரமேஷ் குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி எதிரே வந்த கொரியர் வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தொடர்ந்து தகவல் அறிந்து சென்ற போலீசார் இடிபாடுகளில் சிக்கியிருந்த ரமேஷ் குமாரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காகக்காக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து மணிமாறனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கோயில்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. லாட்டரி சீட்டு அதிபரான கேஏஎஸ் சேகரின் உடன்பிறந்த தம்பி தான் இந்த கேஏஎஸ் மணிமாறன். லாட்டரி சீட்டு முடிவுகளை வெளியிடுவதற்காக 'அதிர்ஷ்டம்' என்ற நாளிதழைத் தொடங்கி, அதன் மூலமாக பத்திரிக்கை உலகிற்குள் பிரவேசித்தவர். அதிர்ஷ்டம் மணிமாறன் தான் பின்னாளில், 'தினபூமி மணிமாறன் ஆனார்.
80 - 90 காலகட்டத்தில் தமிழ் நாளிதழ்கள் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகிக் கொண்டிருந்தபோது அதிர்ஷ்டம் நாளிதழுக்கு டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சின் என தமிழ்நாட்டைத் தாண்டியும் பல பதிப்புகளை தொடங்கியவர் மணிமாறன் தான்.
இந்த நிலையில் தினபூமி உரிமையாளர் மணிமாறனின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தினபூமி நாளிதழின் உரிமையாளர் திரு.மணிமாறன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர். தினபூமி பணியாளர்கள், பத்திரிகைத் துறையைச் சேர்ந்த தோழர்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
இதேபோல் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,"தினபூமி பத்திரிக்கை உரிமையாளர் திரு. மணிமாறன் அவர்கள் இன்று கோவில்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பயணம் செய்த அவரது மகன் திரு.ரமேஷ் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications