திருசெந்தூர் கோயில் யானை தெய்வானை ரொம்ப சாது.. கோபமாக ’இது’ தான் காரணம்! பாகன் சொல்லும் விளக்கம்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உதயகுமார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தெய்வானை மிகவும் சாதுவான குணம் கொண்டது எனவும், ஏதோ ஒரு தொல்லையை சந்தித்ததன் காரணமாகவே அது மூர்க்கமாக மாறி உள்ளதாக கூறுகிறார் திருச்சியைச் சேர்ந்த பாகன் ஒருவர்.
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சுமார் 20 ஆண்டுகளாக தெய்வானை என்ற 26 வயதான பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள கொட்டடியில் யானை நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது யானையின் உதவிப் பாகனான உதயகுமாரும், அவரது உறவினரான கன்னியாகுமரியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சிசுபாலன் யானைக்கு அருகே சென்றனர். அப்போது சிசுபாலனை யானை தும்பிக்கையால் தூக்கி வீசி தாக்கிக் கொன்றது.
மேலும் அருகில் யானைக்கு அருகே சென்ற உதயகுமாரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பக்தர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்திரத்தில் சிசு பானையும் உதயகுமாரையும் துதிக்கையால் வேகமாக தள்ளிவிட்டதாகவும், இருவரும் சுவற்றில் வேகமாக மோதி பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் ஆத்திரத்தில் உதயகுமாரை தாக்கினாலும் பிறகு அவரை அடையாளம் கண்டு கொண்ட யானை துதிக்கையால் தடவி கொடுத்து எழுப்ப முயன்றது. தலைமைப் பாகன் இராதாகிருஷ்ணன் வந்து யானை மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அமைதிப்படுத்தி உள்ளார். இதற்குப் பிறகு தெய்வானை சோகத்துடனே காணப்படுவதாகவும், நீண்ட நேரமாக சாப்பிடவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் யானையை ஏதோ ஒரு விஷயம் ஆத்திரப்படுத்தி உள்ளது என கூறி இருக்கிறார் திருச்சி கோயில் யானையை பராமரித்து வரும் பாகன் ஒருவர். இது தொடர்பாக பேசிய அவர், நாம் எப்படி வீட்டில் அமைதியாகவும் வெளியில் கொஞ்சம் கவனமாகவும் இருப்போமோ, அதேபோலத் தான் யானைகள் பக்தர்களிடம் இருக்கும் போது சகஜமாகவும், அதன் கொட்டடியில் கொஞ்சம் கவனமாகவும் இருக்கும்.
அதே போல் தான் திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானையும் இருந்திருக்கிறது. தனது கொட்டடியில் அமைதியாக இருந்த போது உதயகுமாரின் உறவினர் சிசுபாலன் யானைக்கு பிடிக்காத விஷயத்தை செய்து இருக்கிறார். குறிப்பாக அடிக்கடி யானையை சுற்றி வந்து செல்ஃபி எடுத்ததோடு, அதன் துதிகையை முத்தமிட்டு இருக்கிறார்.
யாரோ வேறு ஒருவர் தனது துதிக்கையை தொடுகிறார் என்ற ஆத்திரத்தில் தெய்வானை அவரை தள்ளிவிட்டு இருக்கிறது. ஆனால் உதயகுமார் அருகில் செல்லாமல் தூரத்தில் இருந்தே தெய்வானையை அதட்டி இருந்தால் அது சமாதானமாகி இருக்கும். பதற்றத்தில் அவரும் செல்ல, மூர்க்க நிலையில் ஆத்திரத்தில் இருந்த யானை உதவி பாகன் தான் என தெரியாமல் அவரையும் தாக்கி இருக்கிறது. ஆனால் சில நிமிடங்களிலேயே தெய்வானை தனது இயல்பு நிலைக்கு திரும்பியதோடு பாகனை தேடியது. இது ஒரு விபத்து தான், தெய்வானை மீது எந்த தவறும் கிடையாது" என்றார்.












Click it and Unblock the Notifications