மாரி செல்வராஜ் மீது வன்ம மழை.. உறங்காமல் உதவியது ஒரு குத்தமாயா? வெள்ளத்திலும் வடியாத வெறி
தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை களத்தில் இறங்கி செய்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள் ஒருபக்கம் குவிந்து வரும் நிலையில் மறுபக்கம் அவதூறுகளும், வன்ம விமர்சனங்களையும் ஒரு தரப்பினர் முன்வைத்து வருகிறார்கள்.
சமூக நீதி கருத்துக்களையும், பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகளையும் தனது அழுத்தமான கதைகளின் மூலம் திரைப்படங்களாக்கியவர் மாரி செல்வராஜ். இதன் மூலமாக தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்து நிற்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவரது சொந்த ஊரும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. மாரி செல்வராஜின் தந்தை, குடும்பத்தினர், உறவினர்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

இந்த நிலையில் மற்ற திரை பிரபலங்கள் போல் சமூக வலைதளங்களில் மட்டும் பேசாமல் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்திலும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 18 ஆம் தேதி அவர் வெளியிட்டு உள்ள பதிவில், "வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது.
ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர், பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர், குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.
இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்." என்று குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திமுக எம்பி கனிமொழி ஆகியோரை டேக் செய்து உள்ளார். மற்றொரு பதிவுகளில், "தூத்துக்குடி மாவட்டம் முத்தலாங்குறிச்சியில் சிக்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்பு". என்று குறிப்பிட்டு உள்ளார்.
"கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர். முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர். வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது. நன்றாக விடியும் வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும். மீள்வோம்." என்று தெரிவித்து இருந்தார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அங்கு மீட்புப் பணிக்கு சென்றபோது அவருடன் மாரி செல்வராஜும் உடன் இருந்தார்.
மாரி செல்வராஜ் களத்தில் இறங்கி உதவியதை பலர் பாராட்டி வரும் நிலையில், உதயநிதியுடன் மாரி செல்வராஜ் இருப்பதை கடுமையாக ஒரு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக எல்லை மீறி சாதி ரீதியிலான விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் காண முடிந்தது. 2015 வெள்ளத்தில் களத்தில் இறங்கி உதவிய சில சினிமா பிரபலங்கள், தற்போதைய வெள்ளத்தில் நிவாரண தொகை வழங்கியவர்கள் சமூக வலைதளங்களில் புகழும்போது மாரி செல்வராஜ் மீது ஏன் இந்த வன்மம் என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளுர் ஷாநவாஸ் தெரிவிக்கையில், "வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கிவிட்டது என்று, வீட்டுக்குள் இருந்து கொண்டே வீடியோ வெளியிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார். ஊரே வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று களத்திற்கு சென்று உதவிய மாரி செல்வராஜ் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார். வெறுப்பு அரசியல்!" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் மாரி செல்வராஜ், "என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல... நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications