குலசையில் இன்று சூரசம்ஹாரம்.. லட்சக்கணக்கில் கடற்கரையில் குவியும் பக்தர்கள்.. பலத்த பாதுகாப்பு
தூத்துக்குடி: பிரசித்திப்பெற்ற குலசை தசராவின் 10ம் நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரள உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளததோடு, பக்தர்களுக்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்படினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது.
இங்கு முத்தாரம்மன் சுயம்புவதாக தோன்றியிருப்பதால் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலில் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் வீற்றிருக்கிறார்.

இந்த கோவில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் மைசூர் தசரா விழாவுக்கு பிறகு குலசேகரப்பட்டினம் தசரா விழா தான் நம் நாட்டில் புகழ்பெற்று உள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான குலசை தசரா விழா கடந்த அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து தசரா விழாவில் பங்கேற்று வருகின்றனர். அதேபோல் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேடமணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று வருகின்றனர். இன்று 10 வது நாள் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
குலசை தசராவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது. அதன்படி இரவில் மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெறும். அங்கு மகிஷாசுர வதம் நடைபெறும். முதலில் மகிஷனின் தலை, அடுத்து சிம்ம தலை, பின்னர் மகிஷாசுரனின் தலையினையும் கொய்து வெற்றிக்கொடியை அம்மன் நாட்டுவாள்.
இந்த சூரசம்ஹாரத்தை காண கடற்கரை கிராமமான குலசையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்களுக்காக குடிநீர் வசதி, சுகாதார வசதி, 24 மணி நேரம் இயங்கக் கூடிய மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.
9 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 30 டிஎஸ்பிக்கள் தலைமையில், 4 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும் பகுதி முழுவதும் சுமார் 250 க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், நடமாடும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
குலசை திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கொடிகள், டீ-ஷர்ட்கள் ஆகியவற்றை அணிந்து வரக் கூடாது. ஜாதி அடையாளங்களுடன் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் ஆயுதங்கள் எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு நாளை 11வது நாளில் பக்தர்கள் விரதத்தை முடித்து காப்பு களைவார். நாளை மாலையில் முத்தாரம்மனுக்கு காப்பு களையப்படும். அதன்பிறகு பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். பிறகு நாளை மறுநாள் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனை, மதியம் பாலாபிசேகம், புஷ்ப அலங்காரத்துடன் விழா நிறைவு பெறும்.












Click it and Unblock the Notifications