திருச்செந்தூர் கோயில் யானைக்கு கரும்பு கொடுத்த சேகர் பாபு.. ருசித்து சாப்பிட்ட தெய்வானை! நெகிழ்ச்சி
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவில் யானை தெய்வானை யானையின் உடல்நலம் குறித்து பாகன்களிடம் கேட்டறிந்தார். பின்னர் தெய்வானை யானைக்கு அமைச்சர் சேகர் பாபு கரும்பு கொடுத்தார். தெய்வானை யானையும் தலையை அசைத்து அசைத்து கரும்பை சாப்பிட்டது. கோவில் யானை தெய்வானை தாக்கி பாகன் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் இன்று சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக உள்ளது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில், தெய்வானை என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 26 வயதான தெய்வானை யானையை உதயகுமார் (வயது 46), ராதாகிருஷ்ணன் (57), செந்தில்குமார் (47) ஆகிய 3 பாகன்கள் பராமரித்து வந்தனர்.

கடந்த 18 ஆம் தேதி மாலை தெய்வானை யானை, பாகன் உதயகுமாரையும் அவரை பார்க்க வந்த உறவினர் சிசுபாலன் என்பரையும் தாக்கியது. இதில், காயம் அடைந்த இருவரும் உயிரிழந்தனர். சிசுபாலன் யானையை தொட்டதால் கோபம் அடைந்த தெய்வானை யானை அவரை தாக்கியது. அதை தடுக்க வந்த பாகனையும் தாக்கியுள்ளது. இதில் இருவருமே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோயில் யானையை வனத்துறையினர், கால்நடைத்துறையினர் இணைந்து கண்காணித்து வருகின்றனர். தெய்வானை யானை இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும், வழக்கம்போல் உணவு உட்கொள்வதாகவும் கால்நடை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். பாகன் உதயகுமார் இறந்தாலும், மற்ற பாகன்களான அவருடைய அண்ணன் செந்தில்குமார், தாய்மாமா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து தெய்வானை யானையை பாசத்துடன் பராமரித்து வருகின்றனர்.
பாகன் உதயகுமார் இறந்ததில் சோகத்தில் சரியாக உணவு உட்கொள்ளாமல் வருந்திய தெய்வானை யானை, தற்போது மற்ற பாகன்கள் அளிக்கும் உணவை வழக்கம்போல் சாப்பிட்டு வருகிறது. இதனிடையே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, யானை தெய்வானையை சென்று பார்த்தார்.
அப்போது யானைக்கு எப்படி உள்ளது, அதற்கு வழங்கப்படும் உணவுகள் பற்றி மருத்துவக் குழுவினர் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். பின்னர் யானையின் அருகில் சென்ற அமைச்சர் சேகர் பாபு, அதற்கு கரும்பு ஒன்றை கொடுத்தார். அந்த கரும்பை வாங்கி யானையும் சாப்பிட்டது. பின்னர் யானையிடம் ஆசி வாங்கிவிட்டு அமைச்சர் சேகர் பாபு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பாகன் இறந்த சோகத்தில் இருந்த தெய்வானை யானை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications