Tuticorin: தூத்துக்குடி மாணவி வெட்டி படுகொலை! கம்ப்ளைன்ட் கொடுத்தும் போலீஸ் எடுக்கலை! குமுறும் தந்தை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் காட்டு பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் போலீஸார் புகார் கொடுத்தும் தங்களை அலைக்கழித்ததாக மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இது குறித்து அந்த மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில் என் மகள் 10ஆம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண்களை பெற்றார். நன்றாக படிப்பார். சம்பவம் நடந்த போதும் பிளஸ் 2 தேர்வுக்காக படித்துவிட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்றார்.

நீண்டநேரமாகியும் மகள் வீடு திரும்பவில்லை. இதனால் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன். அங்கிருந்த போலீஸார் விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறினர்.
அதன் பேரில் அங்கு சென்ற போது அடுத்த நாள் காலை 10 மணிக்கு வரச் சொன்னார்கள். நானும் அங்கு சென்றேன். ஆனால் நான் கொடுத்த புகாரை வாங்காமல், என் மகள் யாருடனாவது ஓடி போயிருப்பாள் என போலீஸார் கடுமையாக பேசினார்கள்.
பின்னர் ஒரு வழியாக புகாரை வாங்கி என் மகளை காட்டு பகுதியில் தேடினர். அப்போது என் மகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக கிடந்தார். இதை பார்த்ததுமே என் நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது. இவ்வாறு அந்த தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மாணவியை காணவில்லை என புகார் கிடைத்ததுமே நடவடிக்கை எடுத்திருந்தால் இது போல் அநியாயமாக ஒரு உயிர் போயிருக்காது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. புகாரை எடுக்காமல் மாணவி மீதே தவறான பழியை போட்டு போலீஸார் அலைக்கழித்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி மாநிலம் என முதல்வர் ஸ்டாலின் கூறி வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த விவசாயியின் மகள், அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவருக்குத்தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications