சிறு கருத்து வேறுபாட்டுக்கு எல்லாம்... ஆளுநரை வாபஸ் பெறு முடியுமா? ஆளுநர் ரவிக்கு தமிழிசை சப்போர்ட்
தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தென்காசி சுரண்டையில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னதாக அவர் விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஆளுநர் தமிழிசை
தூத்துக்குடி விமான நிலையத்தில் காவல்துறையினர் அவருக்கு அளித்த மரியாதையை ஆளுநர் தமிழிசை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அவரை வரவேற்க வந்திருந்த பொது மக்களிடம் சென்று சிறிது நேரம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஜி20 அமைப்பிற்கு இந்தியா இப்போது தலைமை தாங்குகிறது. இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை (டிச.9) அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசிக்க உள்ளார்.

கொரோனா வேக்சின்
ஒட்டுமொத்த உலகின் குருவாக பாரதம் இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனவாக இருந்தது. அந்த கனவை நனவாக்க முன்னேற்றப் பாதையில் மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு இன்னுமே அதிகமாகத் தான் உள்ளது. இதனால் அங்கு ஊரடங்கும் கூட அமலில் உள்ளது. ஆனால், நாம் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக வெளியே வந்துவிட்டோம். இதற்கு வேக்சின் மட்டுமே காரணம். இப்போது இந்திய மருந்து நிறுவனங்கள் மூக்கில் விடக்கூடிய கொரோனா மருந்தைக் கண்டுபிடித்துள்ளன. இதன் காரணமாகவே கொரோனாவில் இருந்து நாம் மீண்டுள்ளோம்.

ஆளுநர்
கொரோனா வேக்சினை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் ஊக்குவித்தவர் பிரதமர் மோடி, வேக்சின் பணிகளை முன்னெடுத்தது மாநில அரசுகள். வேக்சினை முழுமையாக நம்பி ஏற்றுக் கொண்டது மக்கள். இவை அனைத்தும் சேர்ந்து தான் கொரோனாவை கட்டுப்படுத்த உதவியுள்ளது. இதனால் தான் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். திமுகவினர் கருத்து வேற்றுமைக்காக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆன்லைன் ரம்மி தடை செய்யும் சட்ட மோசாத குறித்து ஆளுநர் சில சந்தேகங்களை மட்டுமே கேட்டுள்ளார்.

அவசியம் இல்லை
அமைச்சரை அழைத்து சந்தேகத்தைத் தான் கேட்டுள்ளார். அனுப்பும் கோப்புகளை எல்லாம் ஆளுநர் உடனடியாக கையெழுத்துப் போட வேண்டும் என்கிறார்கள். ஆளுநருக்குச் சந்தேகங்கள் எதையும் கேட்கக்கூடாது என்கிறார்கள். ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தால் அவர் நடவடிக்கை எடுக்கப்போகிறார். மசோதாக்கள் வந்த உடனேயே அதில் ஆளுநர் கையெழுத்துப் போட வேண்டும் என எந்தவொரு நிபந்தனையும் இல்லை.

சிறு கருத்து வேற்றுமைக்குக் கூட
ஒரு மசோதா மக்களுக்குப் பயன் அளிக்குமா என்று ஆளுநருக்குச் சந்தேகம் ஏற்பட்டால், அது தொடர்பாக ஆலோசனை பெற நேரம் எடுத்துக் கொள்ளலாம். அதில் தவறு இல்லை. இதை நாம் தாமதப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது. ஆலோசனை பெறத் தானே ஆளுநர் நேரத்தை எடுத்துக் கொள்கிறார். சந்தேகம் அனைத்தும் தீர்ந்த உடன் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். அரசுக்கும் ஆளுநருக்கும் எழும் சிறு சிறு கருத்து வேற்றுமைக்கும் கூட ஆளுநரை வாபஸ் பெற வேண்டும் என்று கூறுவது சரியானது என்பதே எனது கருத்து.

கவலையில்லை
நான் இப்போது தமிழக ஆளுநருக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்பதற்காக என்னையும் சேர்த்து விமர்சிப்பார்கள். நீங்கள் என்ன அவருக்கு வக்காலத்து வாங்குவது என்று சோசியல் மீடியாவில் ஆரம்பித்து விடுவார்கள்.. ஆனால் அதுபற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை" என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர் காரில் தென்காசிக்கு கிளம்பிச் சென்றார். அங்குக் காமராஜர் அரங்கம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications