அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால்.. தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை- மா.சுப்பிரமணியன்
தூத்துக்குடி: தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை என்கிற நிலை உருவாகி உள்ளது என்று, தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Recommended Video
தூத்துக்குடியில் கொரோன தொற்று பரவல் அதிகமானதன் காரணமாக கட்டுப் படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் ஆணையின் பேரில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஏற்படுத்தபட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய இருக்கிறேன்.

தடுப்பூசிகள் வருகை
தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு 36 ஆயிரமாக இருந்தது தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. தமிழகத்தில் 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 46 கோடி ரூபாய் செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது.

உலகளாவிய ஒப்பந்தம்
தடுப்பூசி 18 முதல் 44 வயதிலானவர்களில் செய்தித்தாள் போடுபவர்கள்,காய்கறி விற்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், உள்ளிட்டவர்களுக்கும் முன் களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் போடுவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசிகளை போடாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக மூன்றரை கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்காக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அந்த பணி முடிவடைந்தவுடன் தடுப்பூசிகள் பெறப்பட்டு தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்படும். அதன் பின்னர் தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் இல்லை என்ற நிலை உருவாகும்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தமிழக சுகாதாரத் துறை, தொழில்துறை, மின்சார வாரியத் துறை போன்றவற்றின் முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் தொடர்ந்து கொண்டுவரப்பட்டது. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை என்கிற நிலை உருவாகி உள்ளது.

கருப்பு பூஞ்சை ஆராய்ச்சி
மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி வசதி கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய் நீண்ட நாள் நீரழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சீராய்டு கொடுப்பதனால் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள், தொழிற்சாலைகளில் இருந்து கொண்டுவரப்படும் ஆக்சிஜன் கொடுப்பதால் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள், மேலும் சில அசுத்தமான தண்ணீரால்தான் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். இது குறித்து சிறந்த மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து ஆராய்ச்சி செய்து அதன் பின்னர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து, ஆராய்வதற்காக மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு இரண்டு நாட்களில் இந்த குழு கூட்டம் நடைபெறும்.

வெளிப்படையான புள்ளி விவரங்கள்
கொரோனா தொற்று உயிரிழப்புகளின் எண்ணிக்கை எந்தவித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக வெளியிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications