பெண் யானைக்கு மதம் பிடிக்காது! தெய்வானை ஆக்ரோஷமானது ஏன்? வன அலுவலர் பரபரப்பு பேட்டி
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள தெய்வானை யானை, பாகன் உள்பட இருவரை மிதித்து கொன்றது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் யானைக்கு மதம் பிடிக்காது, அமைதியான சுபாவம் கொண்ட தெய்வானை யானை, பாகனை தாக்கியது ஏன்? என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக வன அலுவர் ரேவதி ரமணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகப்பெருமானின் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த திருச்செந்தூர் கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடலில் நீராடிவிட்டு முருகனை வழிபட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெய்வானை யானை ஆசி வழங்கும். இன்று கோவில் வளாகம் அருகே உள்ள கொட்டகையில் தெய்வானை யானை கட்டபட்டு இருந்தது. இன்று மதியம் 3.30 மணியளவில் யானைக்கு பழம் கொடுப்பதற்காக பாகன் உதயகுமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது அவருடன் குமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த சிசுபாலன் என்பவரும் சென்றுள்ளார்.
முதலில் சிசுபாலன் என்பவர் தான் யானைக்கு பழத்தை கொடுத்தாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஆவேசமடைந்த தெய்வானை யானை, சிசுபாலனை கீழே தள்ளி காலால் மிதித்து நசுக்கியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாகன் உதயகுமார், தெய்வானை யானையை தொடர்ந்து தாக்க விடாமல் தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரையும் யானை தும்பிக்கையால் தள்ளி சுவற்றில் தூக்கி எறிந்துள்ளது.
பிளிறிக்கொண்டே யானை இவ்வாறு இருவரையும் தாக்கியுள்ளது. இதில் 2 பேரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தனர். சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாகன் உதயகுமார் படுகாயத்துடன் மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். யானை மிதித்து 2 பேர் பலியான சம்பவம் திருச்செந்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பக்தர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனடியாக போலீசார் மற்றும் கோவில் நிர்வாகிகள் வந்து பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக நேரில் பார்த்தவர்களிடம் விசாரித்தனர். இதேபோல் வன அலுவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்கள், "திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள தெய்வானை யானை, அமைதியான சுபாவம் கொண்டது. மேலும் பெண் யானைக்கு மதம் பிடிக்காது. எனவே தெய்வானை யானை பாகனை தாக்கியது ஏன்? என்பது தொடர்பாக வன அலுவலர் ரேவதி ரமணன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வன அலுவலர் ரேவதி ரமணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், திருசெந்தூர் கோயில் யானை தெய்வானை அமைதியானது. பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது. 2 பேரை தெய்வானை தாக்கியது குறித்து விசாரித்து வருகிறோம்" என்று அவர் கூறினார். மேலும் ஆண் யானைக்கு தான் மதம் பிடிக்கும். ஆனால் திருச்செந்தூரில் இருப்பது பெண் யானை. 25 வயதான பெண் யானை. மதம் பிடிப்பதற்கு வாய்ப்பு இல்லை.
"சரியான நேரத்திற்கு குளிப்பாட்டாமல் இருந்திருக்கலாம். அல்லது அதற்கு சரியான உணவை கொடுக்காமல் இருந்திருக்கலாம். மேள சத்தமோ அல்லது வேறு ஏதேனும் இடையூறு ஏற்பட்டிருந்தாலும் இந்த சம்பவம் நடந்திருக்கலாம். எனினும் இங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தான் முழுவதுமாக சொல்ல முடியும்" என்றனர்.
இதனை தொடர்ந்து கோவில் யானை தெய்வானை யானைக்கு மருத்துவக் குழு பரிசோதனை செய்து வருகிறது. நெல்லையில் இருந்து வனக்குழுவினர் வருகை தந்து யானைக்கு பரிசோதனை செய்து வருகிறார்கள். இதேபோல் அருகில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
முன்னதாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் யானை மிதித்து இரண்டு பக்தர்கள் பலியான நிலையில், கோவிலின் நடை சாத்தப்பட்டது. 45 நிமிடங்கள் நடை அடைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பரிகார பூஜைகள் நடைபெற்றது. பரிகார பூஜை நடந்த பிறகு மீண்டும் நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி, மாலை 5.00 மணியளவில் பரிகார பூஜைக்கு பின்னர் நடை திறக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications