"துணிவு" படம் பார்க்க விடவில்லை.. விரக்தியடைந்த அஜித் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை.! பகீர் சம்பவம்
தூத்துக்குடி: நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்பதால் ரசிகர் ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. பொங்கலை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி என பெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். முதலில் இந்தப் படம் வங்கிக் கொள்ளை அடிப்படையைக் கொண்டது எனச் சொல்லப்பட்டது.
"துணிவு" பட பாணியில் துணிவாக நடந்த சம்பவம்.. உசைன் போல்டிற்கே விபூதி அடித்த முதலீட்டு நிறுவனம்!
துணிவு
இருப்பினும், படம் வெளியான பின்னரே வங்கிகள் மக்களிடம் இருந்து பணத்தை எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை விளக்கும் படமாக இது அமைந்தது. வங்கிகள் கிரெடிட் கார்ட், மியூட்சுவல் பண்ட் உள்ளிட்டவற்றில் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை இந்தப் படம் விளக்கி இருந்தது. இப்படி நல்ல விஷயத்தைப் படம் சொல்லியிருந்தாலும் கூட, படத்தின் கொண்டாட்டங்களில் சில மோசமான சம்பவங்களும் அரங்கேறுகிறது.
ரசிகர் உயிரிழப்பு
நள்ளிரவு நேரத்தில் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சிகளிலேயே பல மோசமான சம்பவங்கள் நடந்தது. தலைநகர் சென்னையில் நள்ளிரவு காட்சி திரையிடப்பட்ட போது.. ரோகிணி திரையரங்கு வெளியே லாரியின் மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பரத் என்ற ரசிகர் யாரும் எதிர்பார்க்காத வகையில் லாரியின் மேலே இருந்து விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே இதுபோல மற்றொரு சம்பவத்தில் அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்,
அனுமதிக்கவில்லை
தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர் வீரபாகு.. 45 வயதான இவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் இவர் தூத்துக்குடியில் உள்ள பிரபல திரையரங்கில் துணிவு படம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது இவர் மது குடித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தியேட்டர் ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த வீரபாகு, குடும்பத்தினரை மட்டும் படம் பார்க்க அனுப்பிவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
தற்கொலை
வீடு திரும்பிய அவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துணிவு படம் பார்த்த பிறகு வீடு திரும்பிய அவரது குடும்பத்தினர் வீரபாகு சடமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து தென்பாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீரபாகுவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் ஏற்கனவே மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது. மேலும், இதற்கு முன்பே பல முறை தனக்கு உயிர் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி வந்ததும் தெரிய வந்தது. துணிவு பார்க்க விடவில்லை என்பதால் அஜித் ரசிகர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதவி எண்கள்
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.