பெற்ற தாயை தவிக்க விட்ட மகனுக்கு 3 மாதம் சிறை.. தூத்துக்குடி கலெக்டர் அதிரடி.. அறிய வேண்டிய சட்டம்
தூத்துக்குடி: பெற்ற தாயை கடைசி காலத்தில் தவிக்க விடும் மகன்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பாடம் புகட்டி உள்ளார். ஏரல் அருகே பெற்ற தாயை கடைசி காலத்தில் தவிக்க விட்ட மகனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் கிராமத்தை சேர்ந்த இசக்கி - மாலையம்மாள் தம்பதியின் மகன் முத்துக்குமார் . கணவர் இசக்கி இறந்துவிட்டதால் முத்துக்குமாரின் தாயார் மாலையம்மாள் உரிய பராமரிப்பு செலவுக்கு கூட வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.மகன் முத்துக்குமார் போதிய உதவியும் செய்யவில்லை.

இந்நிலையில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மகன் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாலையம்மாள் புகார் மனு அளித்தார். மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் மனுவை விசாரித்த திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர், மாலையம்மாளுக்கு அவரது மகன் முத்துக்குமார் மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.
ஆனால் மாலையம்மாளுக்கோ, முத்துக்குமார் பணம் ஏதும் வழங்கப்படவில்லை . இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி சந்தித்த மாலையம்மாள் தனது மகன் முத்துக்குமார் தனக்கு எந்த உதவியும் செய்வதில்லை என கண்ணீர்மல்க புகார் அளித்து உள்ளார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் முத்துக்குமாருக்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சித் தலைவர் மூலம் 3 மாதம் சிறை தண்டனை விதிக்க உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமையிலான ஏரல் போலீசார், முத்துக்குமாரை கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர். தன்னைப் பெற்ற தாயை கவனிக்க தவறிய மகனை மாவட்ட ஆட்சியர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜின் செயலை பலரும் பாராட்டினார்கள்.
மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுப்பதற்காக பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு (திருத்த) மசோதா, 2019-ல் வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பெற்றோருக்கு அதிகபட்ச பராமரிப்பு தொகை மாதம் 10,000 ரூபாய் என்று சட்டம் போடப்பபட்டுள்ளது. பராமரிப்புத் தொகையானது உரிமைகோருபவரின் தேவைகளால் தீர்மானிக்கப்படுகிறது . அதேநேரம் ஒரு நபர் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கு பராமரிப்பை வழங்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பராமரிப்பு தொகை குறித்து அதிகாரிகள் உத்தரவிட்டும், ஒருவர் பராமரிப்பு தொகையை பெற்றோருக்கு செலுத்தவில்லை என்றால், அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications