தூத்துக்குடி கோவிலில் கேட்ட வித்தியாசமான சத்தம்.. கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்ட கோமதி விநாயகம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் உள்ள சில கோவில்களில் சமீபகாலமாக உண்டியலை உடைத்து பணத்தை திருடும் சம்பவம் அதிகளவில் நடப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தது. இதையடுத்து போலீசார் கழுகுமலை பகுதியில் உள்ள கோவில்களில் அதிகாலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கழுகுமலையில் உள்ள ஒரு கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடிய நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கோவில்களில் சிலர் உண்டியலில் கை வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அப்படி உண்டியலில் கை வைப்பவர்களை முன்பு சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் பிடிக்க முடியாத நிலை இருந்தது. அதேநேரம் தற்போதும் பல்வேறு கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லை.. இதை பயன்படுத்தி திருடர்கள் திருட முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் உள்ள சில கோவில்களில் சமீபகாலமாக உண்டியலை உடைத்து பணத்தை திருடும் சம்பவம் அதிகளவில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து கழுகுமலை நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக்கினர். அந்த வகையில் கழுகுமலை பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் அருகே கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 2 மணியளவில் ரோந்து சென்றுள்ளார்கள்.
அப்போது கோவிலுக்குள் இருந்து வித்தியாசமாக சத்தம் வந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் நைசாக கோவிலுக்கு சென்று பார்த்துள்ளார்கள். அப்போது அந்த கோவிலில் இருந்த உண்டியலை மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் உடைத்துவிட்டு காணிக்கைகளை திருடிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.
இந்நிலையில் அந்த மர்ம நபர், போலீசாரை கண்டதும் திடுக்கிட்டதுடன், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் உஷாரான போலீசார் அந்த கொள்ளையனை கையும் களவுமாக மடக்கிப்பிடித்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கழுகுமலை அருகே உள்ள தெற்கு கழுகுமலை நடுத்தெருவை சேர்ந்த 45 வயதாகும் கோமதிநாயகம் என்பது தெரியவந்தது.
கூலித்தொழிலாளியான கோமதி நாயகம், சரிவர வருமானம் இல்லாமல் இருந்து வந்தாராம. இதனால் இரவு நேரத்தில் இந்த கோவிலுக்குள் புகுந்து பணம் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கோமதி நாயகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவர் உண்டியலில் இருந்து திருடி கையில் வைத்திருந்த ரூ.850 ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். இவருக்கும் கழுகுமலை பகுதிகளில் உள்ள சில கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் திருட முயன்றபோது போலீசாரிடம் வசமாக கொள்ளையன் சிக்கிய சம்பவம் கோவில்பட்டி கழுழுமலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications