அண்ணாமலையின் ஊழல் பட்டியல் ரெடி.. நாள் குறித்த திமுக.. தூத்துக்குடியில் சீறிய ஆர்.எஸ்.பாரதி!
அண்ணாமலையின் ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாக ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தூத்துக்குடி: வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அதற்கு அடுத்தநாள் அண்ணாமலையின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார். அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக பதவியில் இருந்த போது செய்த ஊழலையும் வெளியிடுவேன் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் கடிகாரம் பற்றிய கேள்வி எழுப்பி அதன் விலை பற்றி கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சர்களின் ஊழல்
மேலும், சொத்து பட்டியல் மற்றும் அதன் இருப்பிடம் ஆதாரமாக வெளியிடப்படும். ஒரு பென்டிரைவில் அதன் நகல் ஊடக நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். துபாயில் வணிகம், வணிக வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவர்களின் அனைத்து முதலீடுகளும் அதில் பிரதிபலிக்கும் என தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை அறிவிப்பு
மேலும் 10 ஆண்டு கால வங்கிக் கணக்குகளுடன், அனைத்தும் விரைவில் பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வரும் ஏப்ரல் 14ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி பேச்சு
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நம்மை சீண்டி பார்க்கிறார். சனானதனம் பற்றி பேசுகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தினை எதிர்க்கிறது.

ஆளுநர் விவகாரம்
ஆகையால் தான் ஆளுநருக்கு வாய் இருக்கிறது, காது கேட்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இதயம் அனுமதிக்கிறதா? ஆளுநருக்கு இதயத்திற்கு பதில் களிமண் இருக்கிறதா? பலர் ஆன்லைன் ரம்மியால் பணத்தினை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை தடுக்க சட்டம் இயற்றினால் அனுமதி தர ஆளுநர் மறுக்கிறார் என்று தெரிவித்தார்.

அண்ணாமலையின் ஊழல்
தொடர்ந்து, பாஜக தமிழ்நாடு அரசியலை வேறு விதமாக நடத்த பார்க்கிறது. திமுக ஆட்சியை ஏதாவது செய்யலாம் என்று பார்க்கின்றனர். ஏப்ரல் 14ம் தேதி அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணமாலை கூறுகிறார். மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன். அவர் காவல்துறை பதவியில் இருந்த போது புரிந்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications