எல்லாமே பெண்களுக்கு தானா? ஆண்களுக்கும் உரிமைத் தொகை தாங்க! கனிமொழியிடம் அடம் பிடித்த இளைஞர்கள்
தூத்துக்குடி: ஆண்களுக்கும் உரிமைத் தொகை வேண்டும் என திமுக வேட்பாளர் கனிமொழியிடம் இளைஞர்கள் சிலர் அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் தூத்துக்குடி எனக்கு 2வது தாய் வீடு, வரும் மக்களவை தேர்தல் பாஜக ஆட்சியை மாற்ற வேண்டிய தேர்தல், கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியது கிடையாது.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி திமுக. ஆனால் வாக்குறுதி கொடுத்த எதையும் நிறைவேற்றாதவர் பிரதமர் நரேந்திர மோடி, உதாரணம் ரூபாய் 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
நம்ம வங்கி கணக்கில் இருக்கும் பணத்தையும் எடுத்து கொள்கின்றனர். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் வங்கி கணக்கில் குறைந்த பணம் இருந்தால் அபராதம் விதிக்கும் முறை ரத்து செய்யப்படும். காங்கிரஸ் - திமுக கூட்டணி கொண்டு வந்த திட்டம் 100 நாள் திட்டத்தை பாஜக முடக்க நினைக்கிறது.
இண்டியா கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்ததும் 150 நாளாக வேலை நாள் உயர்த்தப்படும், ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார். அப்போது 400 ரூபாய் ஊதியம் வரவில்லை என்றால் உங்களிடம் தான் கேட்போம் என்று கூட்டத்தில் இருந்த பெண்கள் கேட்டனர். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் ரூ. 400 தரப்படும் என்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் எல்லாமே பெண்களுக்கு தானா, ஆண்களுக்கும் உரிமைத்தொகை வழங்குங்கள் என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த கனிமொழி எல்லா உரிமைகளும் ஆண்களுக்கு இருக்கு. அப்புறம் எதுக்கு ஆண்கள் உரிமைத் தொகை?
எல்லா உரிமைகளையும் பெண்களிடம் கொடுத்து விடுங்கள், அப்புறம் ஆண்களுக்கு உரிமை தேவை கொடுப்போம், இங்கு யாரும் டம்மி கிடையாது, எல்லோரும் ஒன்றுதான் என்றார்.
அது போல் ஆங்கில தொலைகாட்சி ஒன்று கனிமொழி பேட்டி அளித்த போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக கச்சத்தீவைக் குறித்துப் பேசும் பாஜகவினர் மற்றும் பிரதமர் மோடி, ஏன் அருணாசலப் பிரதேசம் சீனாவின் அத்துமீறல்கள் குறித்துப் பேசவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்கு அந்நாடு மறுபெயர் சூட்டி அறிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நிர்வாகப் பிரிவுகளை நிறுவுவதற்கும், பெயரிடுவதற்கும் பொறுப்பான சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சல பிரதேசத்தின் மறு பெயரிடப்பட்ட பகுதிகள் எனக் குறிப்பிட்டு நான்காவது பட்டியலை வெளியிட்டுள்ளதாக ஹாங்காங் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாடு 'ஜாங்னான்' என்ற பெயரில் அழைத்து வருகிறது. இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications