"உடலுறவுக்கு" மறுப்பு.! ரிசாட்டில் 19 வயது இளம் பெண் கொடூர கொலை! உத்தரகண்ட் பாஜக தலைவரின் மகன் கைது!
ஹரித்துவார்: ரிசார்ட்டில் 19 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அம்மாநில போலீசார் முக்கிய நடவடிக்கை எடுத்து உள்ளது.
உத்தரகண்ட்டில் இப்போது பாஜக அரசு நடந்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.
இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசில் புகார் அளித்த பின்னர், அவர்கள் குடும்பத்தினர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், போலீசார் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

உத்தரகண்ட்
உத்தரகண்ட் பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யா அங்குள்ள பௌரி மாவட்டத்தில் ரிசார்ட் ஒன்றை வைத்துள்ளார்.. அந்த ரிசாட்டில் அங்கிதா பண்டாரி என்ற பெண் வரவேற்பாளராக பணிபுரிந்தார். 19 வயதான அந்தப் பெண் கடந்த திங்கட்கிழமை மாயமாகி உள்ளார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் அவரை தேடிய போதிலும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.

மாயம்
இருப்பினும், போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிதா பண்டாரியின் பெற்றோர் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதில் புல்கித் ஆர்யா தான் தங்கள் மகள் மாயமானதற்குக் காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்கள் மகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கைது
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் புல்கித் ஆர்யாவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கினர். இதனிடையே இன்று போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவருடன் ரிசாட்டில் பணியாற்றி வந்த மேலும் இரு ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இளம் பெண்ணை கொலை செய்து அருகே இருந்த கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் அளித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

திசை திருப்ப முயற்சி
கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் சடலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதைத் தேடும் பணிகளும் ஒரு பக்கம் தனியாக நடந்து வருகிறது. போலீசார் முதலில் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் போலீசாரை திசை திருப்ப முயன்று உள்ளனர். இருப்பினும், போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியதும் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

புல்கித் ஆர்யா
தன்னுடனும் தனது ரிசார்ட்டில் வரும் விருந்தினர்கள் உடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அங்கிதாவிடம் ரிசார்ட் உரிமையாளரான புல்கித் ஆர்யா வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு அங்கிதா தொடர்ந்து மறுத்து உள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசி பிரச்சினையை முடித்துக் கொள்ளக் கடந்த செப். 18ஆம் தேதி அங்கிதாவை அவர்கள் வெளியே அழைத்துச் சென்று உள்ளனர்.

கொலை
அப்போது ரிசார்ட் ஊழியர்கள் இருவரும் உடன் வந்து உள்ளனர். ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து மது அருந்தத் தொடங்கி உள்ளனர். அப்போது இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது அங்கிதா மற்றும் புல்கித் ஆர்யா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் சண்டையாக மாறிய நிலையில், புல்கித் ஆர்யா அங்கிதாவை கொன்றதும் அதன் பின்னர் அவர்கள் சடலத்தைக் கால்வாயில் வீசியதும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications