படியில் பயணம்.. சாலையில் விழுந்த மாணவன்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ
வேலூர்:வேலூரில் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த கல்லூரி மாணவன் கை நழுவி கீழே விழுந்து நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 20 மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு முறையான போக்குவரத்து வசதி செய்து தராப்படாததன் காரணமாக பேருந்துகளில் நெருக்கடி ஏற்பட்டு படிக்கட்டுகளில் ஜன்னல்களில் தொங்கியபடி மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஹீரோயிஸம் காட்டுவதாக நினைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ குப் அவ்வப்போது வெளியாகி பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

அத்துமீறும் மாணவர்கள்
கடந்த சில நாட்களுக்கு முன் ஊத்துக்கோட்டை அருகே பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு சாலையில் கால்களை தேய்த்துகொண்டே மாணவர் ஒருவர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் சக மாணவருக்கு இணையாக மாணவி ஒருவர் மின்சார ரயிலில் நடைமேடையில் இருந்து ஓடிச்சென்று ஏறி கால்களை உரசிக் கொண்டு சென்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

எச்சரித்த காவல்துறையினர்
இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்ட மாணவி மற்றும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மாணவர்கள் பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் சாகசம் செய்வது போல் நடந்து கொண்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும், கைது நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

பேருந்திலிருந்து விழுந்த மாணவன்
இந்நிலையில் வேலூர் மாவட்டம் தொரைப்பாடியில் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிலர் காட்பாடியிலிருந்து செல்லும் அரசு பேருந்தில் ஆபத்தான வகையில் பேருந்தின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி பயணித்தனர். பேருந்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இதனை வீடியோ எடுத்துள்ளனர். அப்பொழுது அந்த மாணவர்களில் ஒருவன் கை நழுவி கண்ணிமைக்கு நேரத்தில் கீழே விழுந்தான். அந்த நேரம் பார்த்து பெரிய வாகனங்கள் எதுவும் வராததால் மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
அதே நேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல அரசு சார்பில் பேருந்துகள் இயக்கபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்பகுதிகளுக்கு மாலை நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இவற்றை தொழிலாளர்கள், பெண்கள் , மாணவர்கள் என அனைவரும் பயன்படுத்துவதால் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படுவதாகவும், அரசு மகளிருக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது போல் மாணவர்களுக்கும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications