வேலூர் அருகே சுற்றி வளைக்கப்பட்ட டாக்டர்.. போலீசார் சரமாரி கேள்வி.. விசாரித்தால் பெரிய ட்விஸ்ட்
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் சிலர் டாக்டர் என்று கூறிக்கொண்டு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர் உத்தரவின் பேரில், குடியாத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் எம்.மாறன்பாபு தலைமையில் மருந்தாளுனர் லலித்குமார், மருந்துகள் ஆய்வாளர் மகாலட்சுமி, பரதராமி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் நேற்று குடியாத்தம் அடுத்த பரதராமி மெயின்ரோடு பகுதியில் இயங்கி வந்த ஒரு கிளினிக்கில் திடீர் சோதனை செய்தார்கள்.
அப்போது அங்கு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த 53 வயதாகும் முகமதுஅலி என்பவரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர் ஆந்திர மாநிலம், சித்தூர் ராம்நகரை சேர்ந்தவர் என்பதும், பி.ஏ. படித்துவிட்டு பல ஆண்டுகளாக இப்பகுதியில் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அங்கிருந்த ஆங்கில மருந்துகள் மற்றும் நோயாளிகளுக்கு போடப்படும் ஊசிகள், பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததாக வழக்கு பதிவு செய்த பரதராமி போலீசார், போலி டாக்டர் முகமதுஅலியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications