பிறந்து 40 நாட்களான குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை.. தாயும் மகளும் பரபரப்பு வாக்குமூலம்!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் பிறந்து 40 நாட்களான ஆண் குழந்தை கழிவறை பக்கெட் தண்ணீரில் தலைகீழாக முழுகடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தந்தை மனோவின் அத்தை மற்றும் அத்தை மகள் உள்ளிட்ட இருவரை கைது செய்து நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த தோல் ஷாப் பகுதியில் வசிப்பவர் மனோ(22). இவர் திருநின்றவூரில் பூக்கடையில் பூமாலை கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்சா நந்தினி(19).
இவர் தேவதானபட்டினத்தை சேர்ந்தவர். வெவ்வேறு பிரிவை சேர்ந்த இருவரும் காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை
கடந்த 5 ம் தேதி நள்ளிரவு குழந்தைக்கு தாய் அம்சா நந்தினி பால் கொடுத்துவிட்டு குழந்தை யுவன் மற்றும் மாமியாருடன் தரையில் ஒன்றாக படுத்து உறங்கியுள்ளார். கணவர் மனோ அருகில் கட்டிலில் தூங்கியதாக கூறப்படுகிறது. மீண்டும் நள்ளிரவு ஒரு மணியளவில் குழந்தைக்கு தாய்ப் பால் கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார்.

குழந்தை இல்லை
மீண்டும் 2 மணிக்கு எழுந்து பார்த்த போது குழந்தை இல்லாததை கண்ட அம்சா நந்தினி அதிர்ச்சியடைந்து கணவர், மாமியாரை எழுப்பி விசாரித்துள்ளார். பல இடங்களில் தேடிய நிலையில் வீட்டின் வெளியே உள்ள கழிவறையில் உள்ள பிளாஸ்டிக் பக்கெட் நீரில் முழுகடித்து தலைகுப்புற இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

உறவினர்கள்
இச்சம்பவம் குறித்து தந்தை மனோ அளித்த புகாரின் பேரில் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையின் தந்தை மனோவின் தந்தையின் சகோதரி தேன்மொழி(52), மற்றும் அவரது மகள் பாரதி (30) ஆகிய இருவரும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

வீட்டு மனை
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் மனோவின் தந்தை இறந்த பின் அவருடைய வீட்டுமனை தேன்மொழிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது கிடைக்கவில்லை. மனோவின் தாய் கீதா கஷ்டப்பட்டு அந்த இடத்தில் சிறிய வீடுகட்டி மகனுடன் வசித்து வருகிறார். தனது இளைய மகளை மனோ திருமணம் செய்யாமல் வேறு இனத்து பெண்ணை திருமணம் செய்து ஆண் வாரிசும் பிறந்ததால் மேலும் ஆத்திரமடைந்த தேன்மொழி குழந்தையை கொலை செய்ய மகளுடன் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

தீயசக்தி
மேலும் குழந்தையின் தாய் அம்சா நந்தினியை தீய சக்தி பிடித்துள்ளதாக கூறி அடிக்கடி நாள் முழுவதும் வீட்டில் அடைத்து மாந்த்ரீகம் செய்வதாக கூறி வேப்பிலையால் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். குழந்தையின் தந்தை மனோ தனது பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை மணந்தது, சொத்து கிடைக்காத விரக்தியால் திட்டமிட்டு சம்பவத்தன்று இரவு வீட்டின் வெளியே படுத்திருந்த தேன்மொழி பலமுறை உள்ளே செல்ல முயற்சித்துள்ளார்.

விசாரணை
இறுதியாக அனைவரும் உறங்கிய பின் குழந்தையை தூக்கிச் சென்று பக்கெட் நீரில் தலைகீழாக போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போன்று படுத்து உறங்கியதாகவும் பின்னர் அனைவரும் தேடும்போது தானும் தனது மகளும் சேர்ந்து தேடியதாக கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து பச்சிளம் குழந்தையை கொன்றது, அதற்கு மகள் உடந்தையாக இருந்ததாக கூறி தேன்மொழி, பாரதியை அரக்கோணம் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.












Click it and Unblock the Notifications