மத்திய கூட்டுறவு வங்கியின் மேனேஜர்.. அதுவும் ஒரு பெண்.. பண்ண வேலையை பார்த்தீங்களா.. இப்போ டிஸ்மிஸ்!
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் மத்திய கூட்டுறவு வங்கியின் பெண் கிளை மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூரை அடுத்த குடியாத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பணம் போடுவது, எடுப்பது மற்றும் பயிர்க்கடன், விவசாயக்கடன் மற்றும் மகளில் சுயஉதவிக்குழு கடன், புதிய தொழில் கடன் என பல உதவிகளுக்காக நாடுவது வழக்கம்.
இந்நிலையில், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் உமா மகேஸ்வரி மீது பல்வேறு புகார்களை பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். அதாவது, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மோசடி குறித்து குடியாத்தம் வங்கியில் வேலூர் வணிக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், உமா மகேஸ்வரி பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் பேரில், வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உமா மகேஸ்வரியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உமா மகேஸ்வரி விசாரணைக்குப் பின்னர் வேலூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் உமா மகேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். உமா மகேஸ்வரிமீதான குற்றச்சாட்டு தணிக்கையின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்ட நிலையில், உமா மகேஸ்வரியை பணி நீக்கம் செய்து வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வங்கி தொடர்பாக பொதுமக்கள் உமா மகேஸ்வரியுடன் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.