வேதனை தந்த வேலூர் சம்பவம்! கருவிலிருந்து எடுக்கப்பட்ட 4 மாத சிசு! உடற்கூராய்வில் வெளிவந்த உண்மை..!
வேலூர்: வேலூர் அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவத்தில் இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசு உயிரிழந்தது. இந்த நிலையில் 4 மாத குழந்தைக்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக கடந்த 6ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்குச் சென்றபோது அங்கு அந்த பெண்ணுக்கு ஒரு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அந்த கர்ப்பிணி சத்தம் போட்டதால் கோபமடைந்த அந்த நபர் கர்ப்பிணி என்றும் பாராமல் அந்த பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்த நபர் காட்பாடி வந்ததும் ரயிலில் இருந்து இறங்கி தப்பி சென்றிருக்கிறார். படுகாயம் அடைந்த அந்தப் பெண் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் ரயில்களில் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள் தொடர்பான புகைப்படங்களை போலீசார் காண்பித்த போது குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர் குறித்து அந்த பெண் அடையாளம் காட்டினார். இதை அடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் கேவி குப்பம் அருகே ஹேமராஜ் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே பல பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறி இருந்தனர். சிகிச்சைக்கு பிறகு அவரை அவரது சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக அவரது கருவில் இருந்த சிசு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து பெண்ணின் வயிற்றில் இருக்கும் உயிரிழந்த கருவை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். தொடர்ந்து பெண்ணின் கருவில் இருந்த சிசு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த சிசு வெளியே எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் கீழே தள்ளிவிடப்பட்டு நிலையில், குழந்தைக்கு செல்லும் ஆக்சிஜன், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையை வயிற்றிலேயே கொல்லுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications