தகாத உறவு விவகாரம்! ஆம்பூர் அருகே தலை நசுக்கப்பட்டு பெண் படுகொலை
வேலூர்: ஆம்பூர் அருகே தலை நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார், இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தோட்டாளம் மலை அடிவாரத்தில் மர்ம நபர்கள் பெண் ஒருவரை தலை நசுக்கி கொடூரமாக கொன்று புதைத்து உள்ளனர் ஆனால் சரியாக புதைக்கப்படாததால் கால்கள் வெளியே தெரிந்தது.

இதனை அந்த வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் நேற்று மாலை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆம்பூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். ஆனால் இரவு நேரத்தை காரணம் காட்டி திரும்பி சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதனிடையே இந்த தகவல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவவே, பாலூரைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவரது மனைவி செல்வி காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே கொல்லப்பட்டது அந்த பெண்ணாக இருக்கலாம் என அந்த கிராம மக்கள் சந்தேகித்தனர். இதையடுத்து அந்த கிராம மக்கள்,புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்க வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மீண்டும் வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காணாமல் போன செல்வியின் உடல் தான் என உறவினர்கள் கண்டுபிடித்தனர். இந்நிலையில் செல்வியை கொன்றதாக பொன் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில், சுதாகர் ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். தகாத உறவு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications