வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்.. ஐகோர்ட் உத்தரவால் அரசு அதிரடி முடிவு
வேலூர்: வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியை தாக்கிய வழக்கில் சிறை அதிகாரிகளை இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பி இருந்தது. இந்த விவகாரத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி, ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் சிறையில் சிவக்குமார் என்பவர் ஆயுள் கைதியாக இருக்கிறார். இவரை சிறைத்துறை டி.ஐ.ஜி. வீட்டு வேலைக்கு அழைத்து சென்றிருந்தாராம். அப்போது பணம், நகையை சிவக்குமார் திருடி விட்டதாக கூறி, அவரை சிறைக்காவலர்கள் அடித்து துன்புறுத்தியாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் மகனின் நிலையை அறிய விரும்பிய அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேலூர் தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வேலூர் தலைமை மாஜிஸ்திரேட்டு விசாரித்து தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், வேலூர் சிறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதன்படி சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், ஆட்கொணர்வு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் இ.ராஜ்திலக், இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. தரப்பில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்கள்.
இதை படித்து பார்த்த நீதிபதிகள், "கைதியை அடித்த வழக்கில் சிறைத்துறை டி.ஐ.ஜி. மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. துறை ரீதியான நடவடிக்கை இதுவரை ஏன் எடுக்கவில்லை. இந்த வழக்கில் சிறை அதிகாரிகள் யாரையும் இதுவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் குற்றவியல் வக்கீல், ''அந்த அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் கூறுகையில், "வேலூர் தலைமை மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கையில், வேலூர் சிறையில் பழமையான மிகப்பெரிய தேக்கு மரம் இருந்தது. அதை வெட்டி, வீட்டுக்கு தேவையான கட்டில், மேஜை, நாற்காலி உள்ளிட்டவைகளை செய்துள்ளதாக டி.ஐ.ஜி. மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதுமிகவும் தீவிரமான குற்றச்சாட்டு. அதிகாரிகளுக்கு நல்ல ஊதியத்துடன், அனைத்து வசதிகளையும் அரசு செய்துக் கொடுத்துள்ளது. அதன் பின்னரும், இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஏன் ஈடுபடவேண்டும்?
கடைநிலை ஊழியர் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போட்டால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை பணியிடை நீக்கம் செய்கிறார்கள். ஆனால் உயர் அதிகாரி மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து டி.ஐ.ஜி. ராஜலட்சுமியிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி, ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை ஏடிஜிபி பிறப்பித்துள்ளார். மேலும் இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்ற நபர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக இந்த விவாகரம் காரணமாக ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் வேலூர் சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார்.












Click it and Unblock the Notifications