ஆகஸ்ட் 5-ல் வேலூர் மக்களவை தேர்தல்.. தந்தையுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த கதிர் ஆனந்த்
Recommended Video

வேலூர்: வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக சார்பாக கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தனது தந்தையும் திமுக பொருளாளருமான துரை முருகனுடன், வேலூர் ஆட்சியர் அலுவலகம் சென்று தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் கதிர் ஆனந்த் மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.
முன்னதாக தமிழகத்தில் வேலூர் உள்பட 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிட்டார். மேலும்இத்தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த நிலையில், வேலூர் தொகுதியில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக சரமாாியான புகார்கள் குவிந்தன எழுந்தது. பின்னர் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ஆங்காங்கே பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஏராளமான பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. பின்னர் தமிழகத்தில் வேலூர் நீங்கலாக மற்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் அதிமுக 1 தொகுதியையும் வென்றது.
இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் என கடந்த 4-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜூலை 11 முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
வேட்புமனுக்கள் மீது நாளை மறுநாள் பரிசீலனை நடத்தப்படுகிறது. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 22 ஆகும். அதிமுக கூட்டணி சார்பாக மீண்டும் ஏ.சி. சண்முகம் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 11ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications