தேர்தல் நாளில் நடத்த சர்ச்சை.. பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்.. வேலூர் எஸ்பி உத்தரவு
வேலூர் : தேர்தல் பணியின் போது மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் பாகாயம் சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு வேலூர், மதுரை, கோவை , தென் சென்னை, வட சென்னை என மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்தது. வேலூரில் ஏப்ரல் 19ம் தேதி நடந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவினை ஒட்டி, தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மண்டல பொறுப்பாளர்கள் மேற்பார்வையில் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் மற்றும் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் வேனில் கொண்டு செல்லப்பட்டது.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் கூடிய வாகனத்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வேலூர் போலீஸ் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (மொபைல் டீம்) நியமிக்கப்பட்டனர். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லும் வேனிற்கான பாதுகாப்பு பணிக்கு வேலூர் பாகாயம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் மண்டல பொறுப்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்றபோது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் பணியில் இருந்த அரசு அலுவலர்களின் பணிக்கு இடையூறு மற்றும் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான அறிக்கையை அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் வழங்கினார். அதன்பேரில் வெங்கடேசனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் சரியாக விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications