55 நாட்களாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.க. அழகிரியின் மகன்! துரை தயாநிதிக்கு என்ன ஆச்சு?
வேலூர்: 55 நாட்களாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நலம் எப்படி இருக்கிறது?
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் இருந்தவர். இவருக்கும் தந்தைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் திமுகவில் மீண்டும் இணைய குடும்ப உறுப்பினர்கள் கருணாநிதியை சமாதானம் செய்ய முயன்றும் அது நடக்கவில்லை.

அவ்வப்போது திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். மு.க.ஸ்டாலினையும் மு.க.அழகிரியையும் ஒன்றிணைக்க குடும்ப உறுப்பினர்கள் செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்தது. இதைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற விழாவுக்கு அழகிரி குடும்பத்திற்கு அழைப்பு விடுத்ததாக சொல்லப்பட்டது. இந்த விழாவுக்கு மகன் துரை தயாநிதியையும் மகள் கயல்விழியையும் அழகிரி அனுப்பி வைத்தார். அந்த விழாவில் துரையும் உதயநிதியும் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தினர். இதை தொடர்ந்து பணி நிமித்தமாக முதல்வர் ஸ்டாலின் எப்போது மதுரை சென்றாலும் அழகிரியை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
ஆனால் அழகிரி- ஸ்டாலின் படித்த பள்ளி விழாக்களில் முதல்வர் கலந்து கொண்ட போது தானும் அண்ணனும் அந்த பள்ளியில் எப்படி சேர்க்கப்பட்டோம் என்பது குறித்து பழைய கால நினைவுகளை எல்லாம் உணர்ச்சிப்பூர்வமாக பேசிவந்தார். இந்த நிலையில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஜல்லிக்கட்டு விழா திறப்புக்கு மதுரை சென்ற அவர், தனது பெரியப்பா அழகிரி, பெரியம்மா காந்திமதி ஆகியோரிடம் ஆசி பெற்றார். இந்த நிலையில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
தொழிலதிபராகவும் சினிமா தயாரிப்பாளருமான துரை தயாநிதி, கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி திடீரென வீட்டில் மயக்கமடைந்தார். உடனே அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த அடைப்பை சரி செய்ய அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த மார்ச் மாதத்தில் துரை தயாநிதியை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து துரை தயாநிதியை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில்தான் கடந்த மாதம் ஏப்ரல் 2ஆம் தேதி துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
லோக்சபா தேர்தலையொட்டிதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக வேலூர் சென்ற முதல்வர், தனது மனைவி துர்காவுடன் சென்று துரையை சந்தித்து நலம் விசாரித்திருந்தார். 55 நாட்களாக துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் மகன் துரை தயாநிதியை நேரில் சென்று பார்வையிட்டார். அவர் கடந்த மாதத்தை விட தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவே தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications