“நீங்க நடத்துற பள்ளிகளில் தமிழ் எங்கே? அண்ணாமலை கேட்டாரே.. பதில் சொல்லுங்க” ஆவேசமாக கேட்ட சீமான்!
வேலூர்: "தம்பி அண்ணாமலை கேட்பதற்கு பதில் என்ன? நீங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், "திமுக இந்தி திணிப்பு விவகாரத்தில் தொடர்ச்சியாக நாடகமாடுகிறது. தேர்தல் வருவதால் இதுபற்றி பேசுகிறார்கள். இத்தனை முறை மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்தீர்களே.. கட்டாய இந்தி திணிப்பை தடுக்க ஏதாவது வேலை செய்தீர்களா?

மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வேண்டும் எனப் போராடினீர்களா? இந்த அரசு இன்றைக்குத்தான் புதிதாக இந்தியை திணிக்கிறதா? நீங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? எத்தனை காலத்துக்கு இந்த நாடகத்தை நம்பச் சொல்கிறீர்கள்?
தம்பி அண்ணாமலை கேட்பதற்கு பதில் என்ன? நீங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இருக்கிறதா? அங்கு தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறதா? உங்கள் கொள்கை முடிவு என்ன? எங்கள் கொள்கை, எம்மொழியும் கற்போம் நாங்கள் வாழ, எம்மொழி தமிழ் கற்போம் எங்கள் இனம் வாழ. உலகின் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் கொள்கை மொழி அவரவர் தாய் மொழியாகத்தான் இருக்கவேண்டும்.
மும்மொழிக் கொள்கையில் எம் மொழி எங்கே இருக்கிறது? நம்ம Chennai, நம்ம ஸ்கூல் என்கிறீர்கள். இதுதான் தமிழ் வளர்க்கும் லட்சணமா? எத்தனை நாளைக்கு இந்த நாடகத்தை நடத்துவீர்கள்?" எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.
முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "மக்களைக் குழப்புவதையே தொழிலாகக் கொண்ட திமுகவினர், தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நியாயம், தமிழக மக்களுக்கு ஒரு நியாயம் என்றே எப்போதும் நடந்து கொள்வார்கள். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக் கொடுக்கும் CBSE, மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்துவார்கள் அல்லது தங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளை அத்தகைய பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைப்பார்கள்." எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications