காட்பாடி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு.. 8 மாத குழந்தையுடன் ரயிலுக்கு அடியில் தவறி விழுந்த பெண்!
வேலூர்: வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் எர்ணாகுளம் ரயில் நின்ற போது கால் தவறி குழந்தையுடன் கீழே விழுந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது குழந்தை நலமாக உள்ளது.
தமிழர் பண்டிகையான பொங்கலுக்கு அனைத்து இடங்களிலும் கூட்ட நெரிசல்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனிடையே கொரோனா வேரியண்ட்டான ஓமிக்ரான் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் லாக்டவுன் அச்சத்தில் வெளிமாநிலத்தவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுகிறார்கள்.
இதனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதையடுத்து நேற்று காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரு பெண் 8 மாத ஆண் குழந்தையுடன் நடந்து வந்துள்ளார்.

தண்டவாளத்தில் விழுந்த பெண்
அவர் கால் தவறி தண்டவாளத்தில் விழுந்ததாக தெரிகிறது. அப்போது எர்ணாகுளத்திலிருந்து பிளக்ஸ்பூர் செல்லும் ரயில் காட்பாடி நிறுத்தத்தில் நிறுத்தும் போது ரயிலின் அடியில் தாயும் குழந்தையும் சிக்கிக் கொண்டார்கள். இதனையடுத்து ரயில்வே போலீஸார் குழந்தையையும் தாயையும் உயிருடன் மீட்டனர்.

தாய் மீட்பு
தலையில் பலத்த காயத்துடன் மயக்க நிலையில் தாய் மீட்கப்பட்டார். குழந்தை நலமாக உள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் தாயும் குழந்தையும் வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காட்பாடி ரயில்வே போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடையாளம் தெரியவில்லை
இதுகுறித்து போலீசாரின் விசாரணையில் எர்ணாகுளம் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நிற்கும் போது இந்த பெண் கால் தடுக்கி குழந்தையுடன் விழுந்ததாக தெரிகிறது. ரயில் தண்டவாளம் இடையில் விழுந்ததால் குழந்தையும் தாயும் உயிருடன் இருக்கிறார்கள். அடிபட்ட பெண் மயக்க நிலையில் உள்ளதால் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என இதுவரையில் தெரியவில்லை.

ஆபத்தான நிலையில் தாய்
அவர் மயக்கம் தெளிந்த பிறகே அவர் குறித்த விவரங்கள் தெரியவரும். அவரிடத்தில் அடையாள அட்டைகள் எதுவும் இல்லை என்றார். தாயையும் 8 மாத குழந்தையையும் காப்பாற்றிய இச்சம்பவத்தால் ரயில்வே போலீசாருக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். இருப்பினும் ரயிலில் அடிப்பட்ட பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications