வாணியம்பாடி அருகே இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை.. முன்விரோதமா என விசாரணை
வேலூர்: வாணியம்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தகர குப்பம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்து. இவரது மகன் சக்திவேல்(21). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் இவர் காணவில்லை.

இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இன்று தகர குப்பம் மலைப்பகுதியில் ஒரு சடலம் இருப்பதாக தெரிய வந்த நிலையில் உறவினர் மற்றும் பெற்றோர் சென்று பார்த்தனர்.
அப்போது சக்திவேல் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக இருந்ததை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இவரது நண்பர்களான பிரபு, ஜெய், பெருமாள் ஆகியோருடன் சென்றதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில் வேட்டையாடுவதில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டு இருக்கலாமோ? அல்லது முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என பல்வேறு கோணங்களில் திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications