உழைத்ததற்கு ஊதியம் இல்லை! மறியல் செய்த 100 நாள் வேலை பணியாளர்கள்! ஸ்தம்பித்த திண்டிவனம் சாலை!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் செஞ்சி -திண்டிவனம் பிரதான சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சுமார் 2 மணி நேரமாக சாலையின் இரு மருங்கிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உழைத்ததற்கு ஊதியம் கொடுக்கவில்லை என்பதே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் புகாராக உள்ளது.

100 நாள் வேலை
கிராமப்புறங்களில் வறுமையை நீக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். சாலையோரங்களில் உள்ள முட்புதர்களை அகற்றுவது, குளம் வெட்டுவது என அவர்கள் பார்க்கும் பணிக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் மூலம் வங்கியில் சம்பளம் செலுத்தப்படுவது வழக்கம். பல இடங்களில் இந்த ஊதியத்தை வங்கிகளில் இருந்து எடுப்பதற்குள் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் படாதபாடு படுவதை நம்மில் பலரும் பார்த்திருக்க முடியும்.

சம்பளம் இல்லை
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள குறிஞ்சி கிராமத்தை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோருக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் சம்பளமே வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், தொடர் அழுத்தத்திற்கு பிறகு விடுவிக்கப்படும் சம்பளத் தொகையும் குறைவாகவே உள்ளதாகவும் அதற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கவில்லை எனவும் குறிஞ்சி கிராமத்தை சேர்ந்த 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் புகார் கூறுகின்றனர்.

600 பேர்
பலமுறை இது தொடர்பாக முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் செஞ்சி-திண்டிவனம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டு ஊதியம் கொடுக்காததற்கு என்ன காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்தும் பாதித்தது.

பேச்சுவார்த்தை
இதனால் செஞ்சி-திண்டிவனம் பிரதான சாலையின் இரு மருங்கிலும் வாகனங்கள் அணி வகுத்து நிற்கத் தொடங்கின. இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.












Click it and Unblock the Notifications