விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி.. தயாராய் திமுக..ஃபார்முக்கு வந்த பாமக! வேட்பாளர்களுக்குள் ஒற்றுமை
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலையில் திமுக., பாமக, நாம் தமிழர் என மும்முனைப் போட்டி உருவாகி இருக்கிறது. விரைவில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் பிரபலங்களும் விழுப்புரத்தில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் விழுப்புரத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அதில் கலந்து கொண்டிருந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் புகழேந்தி மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். இந்த தகவல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து ஏப்ரல் 8ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி ஒரு எம்எல்ஏ எம்பி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. புகழேந்தி உயிரிழப்புக்கு முன்னதாகவே மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை ஆகியவை நிறைவடைந்து இருக்கின்றன.
இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி வரும் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், ஜூன் 21ஆம் தேதி நிறைவடைகிறது. 24ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும் 26ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் 13-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் தற்போது திமுக வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவித்துள்ளது. இதேபோல பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.
இதேபோல நாம் தமிழர் கட்சியும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களம் இறங்கி இருக்கிறது. அக்கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருக்கிறார். அபிநயா கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு சுமார் 80,000 வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்திருக்கிறது.
ஈரோடு இடைத்தேர்தலை போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது எனவே தேர்தலில் போட்டியிடவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதன் காரணமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தற்போது பிரதான கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் சுயேட்சைகளும் ஒருசில சிறிய கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் வேறு கட்சிகளும் அல்லது பிரபலங்களும் போட்டியிடுகிறார்களா என்பது தெரிய வரும். மேலும் தற்போது போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான அன்புமணி, அபிநயா, அன்னியூர் சிவா, ஆகிய இருவருமே ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications