கொந்தளித்த விழுப்புரம்- ரயில்வே கேட் பலகையில் 'தமிழ்' நீக்கம்- 'தெலுங்கு' மொழியில் எச்சரிக்கை பலகை!
விழுப்புரம்: இந்தி திணிப்பு விவகாரம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில் விழுப்புரம் ரயில்வே கேட்டில் 'தெலுங்கு' மொழியில் பலகை வைக்கப்பட்டிருந்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து இந்தி திணிப்பை மேற்கொள்கிறது என்பது தமிழ்நாட்டின் குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசும் திமுக கூட்டணி கட்சிகளும் இதனை கடுமையாக தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

கோவா விமான நிலையத்தில் தமிழ்நாட்டு பெண்ணிடம் இந்தி கற்றாக வேண்டும் என பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் வலியுறுத்தியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் மூத்த திமுக தலைவர் கனிமொழியிடம் இதேபோல இந்தியில் பேச பாதுகாப்பு படையினர் வலியுறுத்தினர். அப்போது பிரச்சனை பூதாகரமாக வெடித்து இந்தி தெரியாது போடா என்ற பிரசார இயக்கம் உருவெடுத்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் விழுப்புரம் அருகே ரயில்வே கேட் பலகையில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்தது பெரிய சர்ச்சையாகவும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பொதுவாக ரயில்வே கிராசிங்குகளில் உள்ள கேட்களில் நில் என தமிழிலும் இந்தி, ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
ஆனால் விழுப்புரம் வண்டிமேடு ரயில்வே கேட்டில் தமிழுக்குப் பதில் தெலுங்கு மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அதேபோல இந்தி மற்றும் ஆங்கிலத்தில் STOP என எழுதப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். தமிழ்நாட்டில் விழுப்புரம் பகுதியில் ரயில்வே கேட் பலகையில் எதற்காக தெலுங்கு மொழியில் அறிவிப்பு இடம் பெற வேண்டும் என பொதுமக்கள் கேள்வி எழுப்ப இந்த விவகாரம் காட்டுத் தீ போல பரவியது.
இதனால் விவகாரத்தை உடனே முடிவுக்கு கொண்டு தெலுங்கு எழுத்துக்கு மேல் கையால் "நில்" என்ற வாசகத்தை எழுதி ஒட்ட வைத்தது ரயில்வே நிர்வாகம். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விழுப்புரம் பகுதி மக்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications