தைலாபுரம் வந்த குருமூர்த்தி.. பின்னணியில் அமித் ஷா வருகை.. பாமகவின் அடுத்த நகர்வு என்ன?
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க ஆடிட்டர் குருமூர்த்தி வந்ததற்கு பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் அமித் ஷா வருவதற்கு முன்பாக ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் குருமூர்த்தி ஈடுபட்டிருப்பதாகவும், பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த விவகாரம் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்திற்கு முன் தொடங்கியது என்றாலும், வெளிப்படையாக தெரிய வந்தது மத்திய அமைச்சர் அமித் ஷா வருகைக்கு முதல்நாளன்று தான். ஏப்ரல் 10ஆம் தேதியன்று அன்புமணியை செயல் தலைவராக நியமித்து ராமதாஸ் அறிவித்தார்.

பாமக - பாஜக கூட்டணி
இதன்பின் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அன்புமணி மற்றும் செளமியா ஆகியோர் கூறினர். எனது கால்களில் விழுந்து இருவரும் கதறினார்கள். இந்த கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், எனக்கு நீங்கள்தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தாக கூறினார்.
விரும்பாத ராமதாஸ்
இதன் மூலமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு விருப்பமில்லை என்று பார்க்கப்பட்டது. இதனிடையே ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் உச்சத்திற்கு வந்துள்ளது. பாமகவில் உள்ள அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் பதவி நீக்கம் செய்து வரும் நிலையில், அன்புமணி அவர்கள் மீண்டும் பதவி தொடர்வதாக அறிவித்து வந்தார்.
தைலாபுரம் வந்த குருமூர்த்தி
இந்த நிலையில் இன்று காலை திடீரென தைலாபுரத்தில் உள்ள ராமதாஸை பார்க்க அன்புமணி புறப்பட்டு வந்தார். தைலாபுரத்திற்கு வந்த அன்புமணி சுமார் 30 நிமிடங்கள் வரை ராமதாஸை சந்தித்து பேசியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்தனர்.
மதுரை வரும் அமித் ஷா
இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைவதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த முறை சென்னைக்கு அமித் ஷா வந்த போதுதான், அன்புமணியை பதவி நீக்கம் செய்வதாக ராமதாஸ் அறிவித்தார். தற்போது ஜூன் 8ஆம் தேதி அமித் ஷா மதுரைக்கு வரவுள்ளார். அதற்குள் பாமக கூட்டணியை உறுதி செய்ய பாஜக மேலிடம் தரப்பில் குருமூர்த்தி அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வட மாவட்டங்களில் தீவிரம்
மதுரை வரும் அமித் ஷா, தென் மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதே நேரத்தில் வட மாவட்டங்களில் பாமக கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுக - பாமக கூட்டணி இணையும் போது வட மாவட்டங்களில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற முடியும்.
1 மணி நேரம் ஆலோசனை
இதற்காக பாஜக தரப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக ராமதாஸை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 1 மணி நேரம் வரை நடந்த இந்த சந்திப்பில் ஏராளமான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அதிமுக - பாஜக - பாமக கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும், ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications