ஜீ இருக்கிற வரை ஜீபூம்பா மாதிரி.. கேட்டதெல்லாம் கிடைக்கும் – சி.வி.சண்முகம்
விழுப்புரம்: சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் திமுகவின் அதிரடி மூவ்களாலும், உள்கட்சி பிரச்சனைகளாலும் நெருக்கடிக்குள்ளாகி வருகிறார்கள். அதிமுக அவர்களின் சக்தியை விட, பாஜகவின் அதிகாரத்தைத்தான் பெரியளவு நம்பியுள்ளனர். ஜீ இருக்கிற வரைக்கும் ஜீபூம்பா போல நாம் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று அதிமுக மூத்த தலைவர் சி.வி சண்முகம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. மோடி எங்கள் டாடி மாதிரி என்று சொன்னதில் தொடங்கி அதிமுகவினர் மோடியை வாழும் எம்ஜிஆர் போல போற்றி வருகிறார்கள்.

கல்வி கடன் [CV Shanmugam]
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், "உங்கள் பிள்ளைகள் படிப்பதற்காக வங்கியில் கடன் வாங்கிறார்கள். டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என்பதற்காக கடன் வாங்கினீர்கள். ஸ்டாலின் என்ன சொன்னார். கடந்த 2021 தேர்தலில் நான் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் ரத்து செய்வேன் என்றார். செய்துவிட்டாரா. 5 வருடங்களாகிவிட்டது. அவர் சொன்னதை செய்யவில்லை.
கடன் எல்லாம் ரத்து செய்ய முடியாது. அதுவே பச்சை பொய்யான வாக்குறுதி. யார் வங்கியில் கடன் வாங்கினாலும் அதை கட்டித்தான் ஆக வேண்டும். அரசாங்கமே கடன் வாங்கினாலும் திரும்ப செலுத்தித்தான் ஆக வேண்டும். அதனால் தான் எடப்பாடியார் உண்மையான வாக்குறுதியளித்துள்ளார். நான் முதலமைச்சரானால் உங்கள் குழந்தைகள் வங்கியில் வாங்கிய கடனை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்று கூறியுள்ளார்.
ஜீ இருக்கிற வரை
அப்படி என்றால் என்ன.. அரசாங்கமே வங்கியில் உங்கள் கடனை கட்டும். தமிழ்நாடு அரசு உங்கள் கடனை ஏற்கும். நாங்கள் கட்டுவோம். எங்களால் கட்ட முடியும். ஏன் தெரியுமா. எங்கள் கூட்டணியில் யார் இருக்கிறார்கள். இந்திய நாட்டின் பாரத பிரதமர் ஜீ உட்கார்ந்திருக்கிறார். ஜீ இருக்கிற வரை ஜீபூம்பா மாதிரி தமிழகத்திற்கு எல்லாமே நடக்கும். நரேந்திர மோடி எங்களுடன் இருக்கிறார்.
அவர் இந்திய நாட்டின் பிரதமர். ஒரு பிரதமர் நினைத்துவிட்டால் தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லாவற்றையும் வழங்க முடியும். அனைத்துத் திட்டங்களையும் தர முடியும். அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நாம் கேட்டு பெற முடியும். கல்வி, வேலை வாய்ப்பைப் பெற முடியும். ஜீ இருக்கிற வரைக்கும் ஜீபூம்பா போல நாம் கேட்டதெல்லாம் கிடைக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications