நான் ஏதோ நேரடியாக இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை... 13 வயதில் கட்சிக் கொடிப் பிடித்தேன் -ஸ்டாலின்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
Recommended Video
அப்போது பேசிய அவர், தாம் ஏதோ நேரடியாக இந்த இடத்திற்கு (கட்சித் தலைவர் பதவி) வரவில்லை என்றும் 13 வயதில் கட்சிக் கொடியை கையில் ஏந்தி பொதுவாழ்க்கை வந்தேன் எனவும் கூறினார்.
திமுக கடந்த இரண்டு நாட்களாக நடத்திய கிராம சபைக் கூட்டங்களை கண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரண்டு போயுள்ளதாக விமர்சித்தார்.

ஸ்டாலின் பங்கேற்பு
கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் மக்கள் கிராம சபை என்ற பெயரில் மாற்றம் செய்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஏனோ தானோ என்று எழுதிக் கொடுக்கவில்லை என்றும் ஒவ்வொரு புகாருக்கும் தகுந்த ஆதாரங்களோடு தான் ஆளுநரிடம் கொடுத்துள்ளதாக கூறினார்.

ஆளுநருக்கு தெரியும்
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து ஆளுநரும் நன்கு அறிந்து வைத்துள்ளதாகவும் ஆட்சியாளர்கள் மீது அவரும் அதிருப்தியில் இருப்பதை தன்னால் உணர முடிந்ததாகவும் தெரிவித்தார். இதனால் தான் தங்களுக்கு எப்போதும் இல்லாத வரவேற்பை இந்த முறை ஆளுநர் அளித்ததாக ஸ்டாலின் தெரிவித்தார்.

ஸ்டாலின் விளக்கம்
இன்னும் 4 மாதங்களில் ஆட்சி முடியப்போகிறது என்ற சோகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்போதே புலம்ப தொடங்கிவிட்டதாகவும் திமுக மீதான கோபத்தில் முதல்வர் ஏதேதோ பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். திமுக குடும்பக் கட்சி என்கிறார்களே, குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை இயக்கத்துடன் இணைத்து பணியாற்றுகிறார்கள் என்றும் தாம் ஏதோ நேரடியாக இந்த இடத்திற்கு (கட்சித் தலைவர் பதவி) வரவில்லை என்றும் 13 வயதில் கட்சிக் கொடியை கையில் ஏந்தி பொதுவாழ்க்கை வந்தேன் எனவும் ஸ்டாலின் கூறினார்.

4 மாதங்களில் தீர்வு
ஸ்டாலின் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் பகுதி மற்றும் தொழில் சார்ந்த பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் முறையிட்டனர். அதனை குறிப்பெடுத்துக்கொண்ட ஸ்டாலின் இன்னும் 4 மாதங்களில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையை அளித்தார்.












Click it and Unblock the Notifications