ஆணி செருப்பு அணிந்த பூசாரி.. ஒரு எலுமிச்சை பழம் ரூ 13 ஆயிரத்திற்கு ஏலம்.. விழுப்புரத்தில் அதிசயம்
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஒரு எலுமிச்சம் பழம் 15,200 ரூபாய்க்கு விற்பனையானது.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவில் சின்னமயிலம் என்றும், இரட்டைக் குன்றின் மீது அமைந்துள்ளதால், இரட்டைக் குன்று முருகன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஓரம் கட்டுவோம்.. பிடன் வார்னிங்! வேடிக்கை பார்க்க மாட்டோம்.. ஜின்பிங் பதிலடி! அமெரிக்கா சீனா மோதல்!
9 நாட்கள்
இதில் 9 நாட்களுக்கு நடைபெறும் திருவிழாவின் போது, இரட்டைக் குன்றின் மீது அமைந்துள்ள முருகன் அருகில் வைக்கப்பட்டுள்ள வேல் மீது, ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம் வீதம் 9 நாட்களும் வைத்து பூஜை செய்யப்படும். இந்த பழங்கள் 11-ம் நாள் விழா இரவில் ஏலம் விடப்படுவது வழக்கம்.
படையல்
அதன்படி நேற்றிரவு எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டன. முன்னதாக, இடும்பன் சாமிக்கு கருவாடு சோறு படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், எலுமிச்சை பழங்கள் ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டன. இதை உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏலம் எடுத்தனர்.
குழந்தையில்லாத தம்பதி
குறிப்பாக, குழந்தையில்லாத தம்பதியினர், வியாபாரம் செய்பவர்கள், வீடு கட்ட முயல்பவர்கள், தொழில் செய்ய முனைவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள் என பலர் தங்கள் குறைகள் தீரும் என்ற நம்பிக்கையில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர்.
எலுமிச்சை பழம்
ஏலம் எடுப்பவர்களுக்கு எலுமிச்சை பழத்துடன் ஒரு உருண்டை கருவாடு சாதம் வழங்கப்பட்டது. இதில் 7-ம் நாள் எலுமிச்சை பழத்தை சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி 15,200 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். மற்ற நாட்களில் வைத்த பழங்கள் 53,900 ரூபாய்க்கு ஏலம் போனது.
சில்லரை நாணயங்கள்
கடந்த ஆண்டு ஏலத்தில் எலுமிச்சை பழம் ஏலம் எடுத்து, பெண் குழந்தை பெற்ற விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், வேண்டுதலை நிறைவேற்ற குழந்தையின் எடைக்கு எடை சில்லரை நாணயங்களை காணிக்கையாக செலுத்தினர். இந்த எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
1.43 லட்சம் ரூபாய்க்கு எலுமிச்சை பழம் விற்பனை
பின்னர் பூசாரி முன்பு மண்டியிட்டு புடவையின் முந்தானையில் எலுமிச்சை பழத்தை பெற்றுக் கொள்வார்கள். கடந்த ஆண்டு எலுமிச்சை பழங்கள் 1.43 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அந்த பூசாரி ஆணி தைத்த மர செருப்பின் மீது நின்று எலுமிச்சை பழத்தை கொடுப்பார்கள்.