அன்புமணி பொதுக்குழு குறித்த கேள்வி.. பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த ரியாக்ஷன்
விழுப்புரம்: அன்புமணி நடத்தும் பாமக பொதுக் குழு அறிவிப்புக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அன்புமணியின் பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று நடத்தப்பட்டது. இந்நிலையில், அன்புமணியின் பொதுக்குழு குறித்த கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகஸ்ட் 19 ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால், அன்புமணி அதற்கு உடன்படவில்லை. இதைத்தொடர்ந்து, போட்டியாக ஆகஸ்ட் 9 ஆம் தேதியான இன்று பொதுக் குழு கூட்டம் கூட்டப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. அன்புமணி ராமதாஸ் நேரடியாக நீதிபதி முன்பு ஆஜராகினார். காணொலி வாயிலாக ராமதாஸ் ஆஜராகியிருந்தார்.
இதனையடுத்து, விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் வழக்கின் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால் நாங்கள் பொதுக்குழு நடத்த ஆட்சேபனை இல்லை என்றும், இன்று திட்டமிட்டபடி பொதுக் குழுவை நடத்துவோம் என்று அன்புமணி தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின.
பின்னர், அன்புமணி தரப்புக்கு மீண்டும் நீதிபதி அழைப்பு விடுத்தார். அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்த நிலையில், பொதுக் குழுவுக்கு தடைகோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அன்புமணியின் பொதுக் குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்குழு இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸுக்காக தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பொதுக் குழுவில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், முக்கிய தீர்மானமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் பதவிக் காலம் மேலும் ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்து செய்தியாளர்கள் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராமதாஸ், சொல்வதற்கு ஏதுமில்லை என்று பதிலளித்துச் சென்றார்.












Click it and Unblock the Notifications