சிவாஜியும் நான் தான்.. எம்ஜிஆரும் நான் தான்.. மீண்டும் பாமக தலைவரான ராமதாஸ்.. அன்புமணிக்கு செக்
விழுப்புரம்: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டத்தால், அரசியல் களம் இப்போதிருந்தே பரபரக்க தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகள் வெற்றிக்கான வியூகங்களில் பிஸியாக உள்ளனர். பாமகவில் தந்தை, மகன் சண்டை உச்சத்தில் உள்ளது. இதனால் பாமகவினர் மிகுந்த சோர்வில் உள்ளனர். அன்புமணி கடந்த வாரம் பொதுக்குழு கூட்டம் நடத்தி, பாமக தலைவர் பதவியை நீட்டிப்பு செய்தார். இந்நிலையில் ராமதாஸ் இன்று நடத்திய பொதுக்குழுவில் நிறுவனர், தலைவர் ஆகிய பதவிகளையும் அவருக்கே வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வருகிறது. தந்தை, மகன் இடையேயான மோதல் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணி இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறார்.

ராமதாஸ் அன்புமணி மோதல்
ராமதாஸிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது, ஒட்டு கேட்பு கருவி வைத்தது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மறுபக்கம் அன்புமணி தரப்பிலோ, ராமதாஸ் உடன் இருப்போர் தான் பிளவு ஏற்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார். கடந்த வாரம் அன்புமணி பாமக செயற்குழுவை கூட்டினார்.
அதில் பாமக தலைவராக அன்புமணியின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்துள்ளனர். ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில், தைலாபுரத்திற்கு பதிலாக அன்புமணியின் அலுவலகம் தான் பாமகவின் முகவரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது ராமதாஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
அன்புமணிக்கு பதிலடி
மறுபக்கம் அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பொதுக் கூட்டம், மாநாடுகளை நடத்தி வருகிறார். அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது என்று தேர்தல் ஆணையத்திற்கும் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ராமதாஸ் சார்பில் விழுப்புரத்தில் பாமக சிறப்பு பொதுக்குழு இன்று நடத்தப்பட்டது. முழுக்க அன்புமணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அன்புமணியை சீண்டும் வகையில், 'தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை', 'If You are Bad Iam your Dad' போன்ற வாசகங்களை ஏந்தி ராமதாஸ் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
மீண்டும் பவருக்கு வந்த ராமதாஸ்
அன்புமணியிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் வகையில் இந்த செயற்குழு கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது ராதமாஸ்க்கு மீண்டும் இரட்டைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி, வேட்பாளர் விவகாரத்தில் ராமதாஸ்க்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது ஆகியவற்றில் ராமதாஸை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. எதிர்வரும் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் இது பொருந்தும். பொதுக்குழுவுக்கு இனி கட்சி நிறுவனர் அழைப்பது கட்டாயம் என்று விதிகள் மாற்றப்பட்டுள்ளது.
தீர்மானங்கள்
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாததை கண்டித்து ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்புமணி தரப்பு, அடுத்தகட்ட நகர்வு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications