“மனுஷன் பொய் பேசலாம்.. ஆனா ஏக்கர் கணக்குல பேசக்கூடாது” ஸ்டாலின் சொன்னதுமே வெடித்து சிரித்த கூட்டம்!
விழுப்புரம்: "ஒரு மனுஷன் பொய் பேசலாம்.. ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது.. பொய்யின் முழு உருவமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் லோக்சபா தொகுதி வேட்பாளர் ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை அறிமுகப்படுத்தி, திமுக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டு உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

கஜானாவை தூர்வாரிய எடப்பாடி: ஸ்டாலின் பேசுகையில், "திமுக ஆட்சியைக் குறை சொல்லி ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார்... அவருக்கு ஊரில் வைத்திருக்கும் பெயர், பாதம்தாங்கி பழனிசாமி! பச்சைப்பொய் பழனிசாமி! பச்சைத்துரோகம் பழனிசாமி! தன்னுடைய எஜமானருக்கே போட்டியாக பழனிசாமியும் உருட்டுகிறார். எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார் தெரியுமா? அவர் சொல்லித்தான், நாங்கள் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுக்கிறோமாம்! இவர் கஜானாவைத் தூர்வாரிய லட்சணத்தை சீர்படுத்தி, உரிமைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
ஏக்கர் கணக்குல பொய்: உரிமைத்தொகையை நாம் அறிவித்ததும் என்னவெல்லாம் பேசினார் இந்த பழனிசாமி? தி.மு.க கொடுக்க மாட்டார்கள். ஏமாற்றிவிடுவார்கள் என்று பிரச்சாரம் செய்தார். இப்போது வெட்கமே இல்லாமல் பொய் பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி பேசுவதைப் பார்த்தால், ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார், "ஒரு மனுஷன் பொய் பேசலாம்.. ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது!" என்று. அந்த காமெடிதான் என் ஞாபகத்திற்கு வருகிறது! பொய்யின் முழு உருவமாக இருக்கும் பழனிசாமி அவர்களே... எத்தனை ஆண்டுகளானாலும் "உரிமைத் தொகையை ஸ்டாலின் அண்ணன்தான் கொடுத்தார்" என்று தான் தமிழ்நாட்டு மகளிர் சொல்வார்கள்.

பா.ஜ.கவுடன் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு, உத்தமபுத்திரன் போன்று ஊர்வலம் சென்று வாய்க்கு வந்தபடி புலம்பும் பழனிசாமியின் லட்சணம் என்ன? மோடி இந்தியாவைச் சீரழித்தார் என்றால், தமிழ்நாட்டைச் சீரழித்த பாவத்தை செய்தவர் பழனிசாமி! பழனிசாமி ஆட்சிதான், தமிழ்நாட்டின் இருண்ட காலம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த பாவத்தைச் செய்தவர் பழனிசாமி! கொடநாடு கொலை - கொள்ளை - தற்கொலை நடந்த ஆட்சியை நடத்தியவர்! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்த்து, குற்றவாளிகளைப் பாதுகாத்தவர்!
அடகு வைத்து அடிமை சேவகம்: இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பொருட்களைத் தமிழ்நாட்டுக்குள் பழனிசாமி ஆட்சிதான் அனுமதித்தது. அமைச்சர் மற்றும் டி.ஜி.பி மீது சி.பி.ஐ வழக்கு போட்டதும் பழனிசாமி ஆட்சியில்தான்! பெண் எஸ்.பி.க்குப் பாலியல் வன்முறை நடந்தபோது, அதை வேடிக்கை பார்த்தவர் பழனிசாமிதான்! சட்டம் ஒழுங்கு என்பதே இல்லாமல், ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் முடங்கிய ஆட்சியை நடத்தியவர்! தான் பதவி சுகம் அனுபவிக்க தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து, அடிமை சேவகம் செய்தவர் பழனிசாமி! நான்கு ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் அனைத்துத் துறைகளிலும், தமிழ்நாட்டை அதலபாதாளத்தில் தள்ளியவர் பழனிசாமி!
அம்போ என விட்டுவிட்டு: நான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடனே... ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்தேன்... அந்தக் கோப்புகளைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது... அறிவிப்புகளை வெளியிட்டதுடன் சரி... அந்த அறிவிப்புகளுக்கான அரசாணை கூட போடாமல் அம்போ என்று விட்டுவிட்டு சென்றிருந்தார் பழனிசாமி! ஒரு அரசு நிர்வாகம் எப்படி இருக்கக் கூடாது, எப்படி அலங்கோலமாகச் செயல்படக் கூடாது, என்பதற்கு எடுத்துக்காட்டுதான், எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டுகால ஆட்சி.
அ.தி.மு.க ஆட்சியில் சீரழிந்த நிர்வாகத்தைச் சீர்திருத்த, பல அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று! கோட்டையில் இருந்து மட்டும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினால் போதாது, ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி, மாவட்டந்தோறும் ஆய்வுகளை நடத்தினேன்.
விழுந்து புரண்டு நடிக்கிறார்: இது ஒருபக்கம் என்றால், அரசு கஜானாவைத் தூர்வாரிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. நிதி நிலைமையைச் சரி செய்யவே ஒரு கமிட்டி போட்டேன்... அதுவும் சாதாரண கமிட்டி இல்லை... இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில், பொருளாதார அறிஞர்களின் குழுவை அமைத்தேன். இப்படியெல்லாம், அடுத்தடுத்து பல தொடர் நடவடிக்கைகளை எடுத்து, ஆய்வுகளை செய்து, எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகச் சீர்கேட்டைக் களைந்து, இன்று மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவும் கவனிக்கும் சாதனைகளை செய்துகொண்டு இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை மட்டும் அடகு வைக்கவில்லை; அ.தி.மு.கவையும் சேர்த்துதான் அடகு வைத்திருக்கிறார். அதனால், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உண்மையான அ.தி.மு.க தொண்டர்களும் பழனிசாமியை நம்பத் தயாராக இல்லை! இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் தோற்ற பழனிசாமி, இந்தத் தேர்தலிலும் தோற்கத்தான் போகிறார். ஆனால், இப்போதுகூட, பாஜக உடன் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு, கூட்டணி இல்லை என்று விழுந்து புரண்டு நடிக்கிறார். உங்கள் நடிப்பு ஒருபோதும் எடுபடாது எடப்பாடி பழனிசாமி அவர்களே..." என உரையாற்றியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications