Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்
விழுப்புரம்: என் மனைவி துர்கா கோபித்துக் கொண்டு என்கிட்ட ஒரு வாரம் பேசலை தெரியுமா? என இத்தனை ஆண்டு ரகசியத்தை முதல்வர் ஸ்டாலின் போட்டு உடைத்தார். அத்துடன் எடப்பாடி பழனிசாமிக்கும் அவர் பதிலடியை கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் பம்பரம் போல் சுழன்று வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை திநகர் அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கடைகளில் வாங்கும் அரிசியை விட தரமான அரிசி நியாயவிலை கடைகளில் வழங்கப்படும். திமுக ஆட்சியில் கொரோனா போன்ற பேரிடர்கள் இல்லை. அப்படி வந்திருந்தால் முதல்வரே கொரோனாவில் போயிருப்பார் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அவருக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர் கூறியிருப்பதாவது: தோல்வி பயத்தில் பழனிசாமி தினம் தராதரம் இல்லாமல் தரங்கெட்டு பேசுகிறார்.
சென்னையில் என்னை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால் இவரே போயிருப்பார் என என்னை பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே, என் மரணத்தை பற்றி பேசுகிறீர்களே, மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ பயப்படுகிறவனோ நான் இல்லை.
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், 1976 ஆம் ஆண்டு நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்குள்ளானவன் நான்.
ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தேன். பொது வாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என என்னைக்கு சிறைக்கு அனுப்பி வைத்தவர் எனது தந்தை கருணாநிதி. கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாத நான் இந்த கொரோனாவுக்கா பயப்பட போகிறேன்.
கொரோனா மேல் அனைவரும் அச்சத்தில் இருந்த போது அதற்கான பிபிஇ உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் சென்றேன். இதுவரை யாருக்கும் சொல்லாததை இப்போது சொல்கிறேன்... இவ்வாறு நான் கொரோனா வார்டுக்குள் செல்ல போகிறேன் என நான் யாரிடமும் சொல்லவில்லை.
ஆட்சியர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், என் உதவியாளர்கள் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை. இப்படி சொல்லாமல் நான் கொரோனா வார்டுக்கு சென்ற காரணத்தினால் என் மனைவி துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தார். இது சத்தியம்... மக்களை காக்க எந்த அளவுக்கும் துணிச்சலாக செல்லக் கூடியவன். அதற்கெல்லாம் பயந்து அரசியல் தலைவராக நான் இல்லை.
பழனிசாமியின் கீழ்த்தரமான பேச்சைக் கேட்ட பிறகு, என்னுடைய வருத்தம் எல்லாம் என்ன தெரியுமா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இனமானப் பேராசிரியர் என்று எத்தனையோ பண்பாடுமிக்க பெருந்தலைவர்களிடம் நேரில் பழகக்கூடிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நான், இன்று இவருக்கெல்லாம் பதில் சொல்லும் நிலை இருக்கிறதே என்று உண்மையிலேயே வருத்தப்படுகிறேன்.
அதிமுக பொதுச் செயலாளரான பின்பு எடப்பாடி பழனிசாமி வென்றதே இல்லை. திமுக தலைவரான பின் உங்கள் ஆதரவால் நான் தோற்றதே இல்லை. உண்மையில், நடக்கும் தேர்தல் என்பது, டெல்லிக்கும் - தமிழ்நாட்டுக்கும் நடக்கும் தேர்தல். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications