"பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு இருக்காது!" முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
விழுப்புரம்: அடுத்த முறை பாஜக வென்று ஆட்சியை அமைத்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறையே இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்த முறை திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி vs பாஜக கூட்டணி vs நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
ஸ்டாலின் பிரச்சாரம்: திமுக மற்றும் கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நேரடியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி இன்றைய தினம் கடலூர், விழுப்புரம் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாட்டை படுகுழியில் தள்ளிய பாஜகவிடம் இருந்து மீட்கும் அறிக்கை என்ற அவர், நாட்டை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பாஜக தீட்டியிருக்கும் திட்டங்களுக்குத் தடை போடும் தேர்தல் அறிக்கை என்றும் தெரிவித்தார்.
பாஜக மீது தாக்கு: தொடர்ந்து பேசிய அவர், "உங்களில் பலரும் இப்போது படித்து இருப்பீர்கள்.. ஆனால், உங்கள் அப்பா, அம்மா, அவர்களின் அப்பா அம்மா ஆகியோர் படிக்க முடியாத நிலை தான் இருந்தது. அதேபோல எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் அல்லவா.. நல்ல வேலைக்குப் போக வேண்டும் அல்லவா..
ஏனென்றால் இரண்டு மூன்று தலைமுறைகளாகத் தான் நாம் படித்து முன்னேறி வருகிறோம். மரியாதையான வேலைகளுக்கு வந்துள்ளோம். இதற்கு நாம் போராடி வெற்றி இட ஒதுக்கீடும் சமூக நீதியும் தான் காரணம். ஆனால், இன்னுமே கூட நமக்குச் சரியான உரிய பிரதிநிதித்துவம் முழுமையாகக் கிடைக்கவில்லை.. அதற்கு பாஜக தான் காரணம்.
இட ஒதுக்கீடு இருக்காது: ஒவ்வொரு முறையும் பாஜக இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்தான சூழலை உருவாக்குகிறார்கள். இட ஒதுக்கீடு நமது உரிமை எனப் போராட வேண்டி இருக்கிறது. ஏனென்றால் இட ஒதுக்கீட்டிற்கும் சமூக நீதிக்கும் முற்றிலும் எதிரான கட்சி தான் இந்த பாஜக.. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு இருக்காது.. சமூக நீதிக்குச் சவக்குழி தோண்டிவிடுவர்கள்.. நமது மக்களை 100 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடுவார்கள். இதன் காரணமாகவே நாம் பாஜகவை எதிர்க்கிறோம்.
இட ஒதுக்கீடு பெற நாம் ஆண்டாண்டுகளாகப் போராடுகிறோம். திமுக ஆட்சி என்பதே சாமானியர்களின் ஆட்சி தான்.. சாமானியர்களுக்காகத் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் தான் கருணாநிதி. அவரது வழியிலேயே நான் ஆட்சி செய்து வருகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications