எடப்பாடி உடன் கைகோர்க்க ரெடி.. திருமாவளவன் சொன்ன வார்த்தை.. டக்கென திரும்பிப் பார்க்கும் திமுக!
விழுப்புரம் : மதுவிலக்குக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி போராடினால் இணைந்து போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மது விற்பனையை அரசே கண்டும் காணாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மே13ஆம் தேதி மாலை கள்ளச்சாராயம் அருந்திய 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் நேற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அவர் , உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
கள்ளச்சாராயம் குடித்ததால் பலர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்றவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
கள்ளச்சாரயத்தால் பலி அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. அதிமுக, பாமக, விசிக என பல்வேறு கட்சிகளும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி வருகின்றன.

கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார், சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை திறந்திருக்கும்போதே கள்ளச்சாராய புழக்கம் இந்த அளவுக்கு இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது. குடியிருப்புகளுக்கு சென்றே விநியோகம் செய்யக்கூடிய நிலை இருந்திருக்கிறது. மது விற்பனையை அரசே கண்டும் காணாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது

பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் சந்தித்து பேசி இழப்பீடு வழங்கி உள்ளார். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவே அரசு மது விற்பனையை அனுமதிக்கிறது என்ற கருத்து ஏற்புடையது அல்ல. கள்ளச்சாராயம் விற்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த முடியாது. படிப்படியாக அமல்படுத்த முடியும்." எனத் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆட்சியில் மதுவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் போராடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளாரே என்ற கேள்விக்கு, "நாங்கள் கூட்டணி கட்சிதான், நாங்கள் மதுவிலக்கு வேண்டும் என குரல் கொடுக்கிறோமே. எதிர்க்கட்சியாக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி என்ன போராட்டம் நடத்தி இருக்கிறார்.
மற்ற கட்சிகள் மீது குற்றம்சாட்டுவது இருக்கட்டும். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி மதுவிலக்கை நடைமுறைப்படுத்தச் சொல்லி போராட்டம் நடத்தினால், அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க தயாராக உள்ளோம்." எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications