ஓட்டு போட்டதே நீங்க தானே! வன்னியர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.. விசிக திருமா சொன்ன வார்த்தை!
விழுப்புரம்: வன்னிய சமூகத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை எனவும், அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்க பாமக முயற்சிக்கிறது.. அதை நம்ப வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் மஞ்ச கொள்ளை கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது அருந்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது, விசிக - பாமக இடையேயான இரு கட்சி மோதலாக ஏற்பட்டிருக்கிறது.

மஞ்ச கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்ற இளைஞரை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்கி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இந்த சம்பவத்தில் செல்லத்துரை படுகாயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், செல்லத்துரையை தாக்கியதாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, அந்தப் பகுதியில் இருந்த மக்கள் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றினர். இந்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள் மொழியின் தலையை வெட்டுவேன் என நிர்வாகி ஒருவர் பேசியது பரபரப்பை பற்ற வைத்தது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வன்னிய சமூகத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை எனவும், அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்க பாமக முயற்சிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். விழுப்புரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்," மஞ்சக்கொல்லை பிரச்சனையில் விடுதலைச் சிறுத்தைகள் வன்னியர் சமூகத்துக்கு எதிராக நடந்து கொள்ளவில்லை.
முதல் முறை கொடியை அறுத்தெறிந்த போதும் விசிகவினர் பொறுத்துக் கொண்டார்கள், சமாதானத்தை ஏற்றுக் கொண்டார்கள். மீண்டும் கொடி கம்பத்தை வெட்டி தூக்கி எறிந்த போதும் பொறுத்துக் கொண்டார்கள் போராட்டம் நடத்தவில்லை. காவல்துறையில் புகார் கொடுத்தார்கள் நடவடிக்கை இல்லை. பு உடையூரில் நடந்த தாக்குதல் கட்சிக்கு தொடர்புடைய பிரச்சினை அல்ல. இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த பிரச்சனை. ஆனால் அதை விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக பாமக திசை திருப்ப பார்க்கிறது.
வன்னிய சமூகத்துக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன். அது உண்மை இல்லை. அதை நம்ப வேண்டாம். வன்னியர் சமூகத்திற்கும் ஆதிதிராவிடர் சமூகத்திற்கும் இடையிலே இருக்கிற நல்லிணக்கம் மேலோங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வன்னிய சமூகத்தைச் சார்ந்தவர்களும் வாக்களித்து தான் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை நன்றி உணர்வோடு இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளைச் சார்ந்த வன்னிய சமூகத்தினரும் சேர்ந்து வாக்களித்தன் அடிப்படையில் தான் திருமாவளவன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று இருக்கிறார். நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம். ஆகவே, நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் இல்லை. அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்க பாமக முயற்சிக்கிறது. அதை நீங்கள் நம்ப வேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications