கடல் போல் காட்சி தரும் வீடூர் அணை.. விவசாயிகள் ஹேப்பி!
விழுப்புரம்: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வீடுர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சியில் அமைந்துள்ளது வீடூர் அணை. சங்கராபரணி ஆறு மற்றும் பெரியாற்றின் சங்கமிக்கும் இடமிது. இந்த அணையின் மொத்த நீளம் 4500 மீட்டர். உயரம் 32 அடி மற்றும் கொள்ளளவு 605 மில்லியன் கன அடி ஆகும்.

வீடூர் அணையில் தேக்கி வைக்கப்படும் நீரால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும்100 க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்குகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வீடுர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து வீடுர் அணையில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 4 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்த அணை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் கரைபுரண்டு வருகிறது.

இதனால் வீடூர் அணையின் நீரை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வீடூர் நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிப்பதால், சுற்றுவட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வீடூர் அணையின் அழகை ரசித்து செல்கின்றனர்.

அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்வதால் பாதுகாப்பு கருதி கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அக்னிகுப்பம், கணபதிபட்டி, விநாயகபுரம், விரட்டிகுப்பம், கயத்தூர், இளையாண்டிபட்டு, எம்.குச்சிபாளையம், இடையப்பட்டி, ஆண்டிபாளையம், பொம்பூர், திருவக்கரை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருக்கனூர், கூனிச்சம்பட்டு, பத்துகண்ணு, செட்டிப்பட்டு, ஆகிய கிராம மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண்குமாரும் அறிவுறுத்தியுள்ளனர்.













Click it and Unblock the Notifications