மாற்றம் தருமா விக்கிரவாண்டி? 13 ஆண்டுகள் கழித்து இடைத்தேர்தல் களத்தில் பாமக?
விழுப்புரம்: பாமக 13 ஆண்டுகளுக்குப் பிறகுத் தனது கொள்கையை மாற்றிக் கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளது. அதேவேளையில் கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் நாதக தனது முதல் தேர்தலை விக்கிரவாண்டியில் சந்திக்கிறது.
கடந்த 13 ஆண்டுகளாக இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதை பாமக தவிர்த்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சி. அன்புமணியை வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளது.

கடைசியாக 2010 ஆம் ஆண்டு பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் களம் கண்டது பாமக. இந்தத் தொகுதி பாமகவின் கோட்டை எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில் அக்கட்சி வெற்றி பெறவில்லை.
மாறாக திமுக வேட்பாளர் இன்பசேகரன் 77 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் அன்றைய தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் பென்னாகரத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் வெறும் 41 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார்.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் 23 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக ஆட்சி நடந்து வந்தது. ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்றால், இடைத்தேர்தலில் வெற்றிவாகை சூட வேண்டும் என்ற கட்டாயம் அதிமுகவுக்கு இருந்தது.
ஆகவே அப்போது அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததால், இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவை அளித்தது. அதற்குப் பின்னதாக விக்கிரவாண்டியில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாமக தனித்து நின்றது. அந்தக் கட்சி வேட்பாளருக்குக் கடைசியில் 3ஆவது இடம்தான் கிடைத்தது.
அதன்பிறகு இரண்டு முறை விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் 2019இல் அதிமுகவை ஆதரித்தது பாமக. அப்போது அக்கட்சி வெற்றியும் பெற்றது. 2021 இடைத்தேர்தலில் அதே அதிமுகவை பாமக ஆதரித்தபோதும் அக்கட்சி தோல்வியைத் தழுவியது.
பாட்டாளி மக்கள் கட்சி இடைத்தேர்தல் என்பது கசக்கும் கனியாகவே இருந்து வந்துள்ளது. உண்மையில் மாம்பழம் இனிக்கும் கனியாக இருந்தாலும் ஒருபோதும் அது தேர்தல் களத்தில் அப்படியான முடிவை பாமகவுக்கு அளித்ததில்லை.
இப்போது நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாமக 10 தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாகப் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாசின் மனைவி செளமியாவே தர்மபுரி தொகுதியில் தோல்வியை தழுவினார்.
அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் 4.4% எனச் சரிந்தது. ஆகவே, அக்கட்சி இப்போது தேர்தல் சின்னத்தைக் கூட இழந்துள்ளது. இப்படியான நிலையில்தான் பாமக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது.
தமிழ்நாட்டில் 90களில் தொடங்கப்பட்ட பாமக பல ஆண்டுகளாகத் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வருகிறது. அதிமுக, திமுக, பாஜக என அந்தக் கட்சி கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை. இன்றைக்கு எதிரும் புதிருமாக இருக்கும் விசிகவுடன் கூட பாமக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்துள்ளது.
ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 5% தாண்டவில்லை. ஆனால், சமூக, சாதிய பின்புலத்தை முன்னிறுத்தாமல் அரசியல் களத்திற்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 8.8% வாக்குகளைப் பெற்று இப்போது அரசியல் கட்சி அங்கீகாரத்தைப் பெற உள்ளது.
எப்படிப் பார்த்தாலும் 'யானை' தேய்ந்து எறும்பான கதையாக உள்ளது பாமக நிலைமை. இந்நிலையில்தான் 13 ஆண்டுகள் கழித்து இடைத்தேர்தலில் களம் காண முடிவு செய்துள்ளது பாமக.
விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 2,23,173 வாக்காளர்கள் உள்ளனர். இது 2008 மறு சீரமைப்புக்குப் பிறகு உருவான தொகுதி. இது 2011இல் முதல் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது.

சாதிய வாக்குகள் என்று பார்த்தால் 35% க்கும் மேல் வன்னியர்கள் உள்ளனர். அடுத்தபடியாக 30% பட்டியலின மக்கள் உள்ளனர். உடையார் 4 முதல் 5% இருக்கின்றார்கள். இந்த பட்டியலுக்குள் அடங்காத இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், முதலியார்கள், கோனார்கள் எனப் பல சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கிட்டத்தட்ட 30% பேர் உள்ளனர்.
ஆக, சாதிய வாக்குகளை மட்டுமே பெறுவதால் பாமகவினால் வெற்றி பெற்றுவிட முடியாது. விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள்தான் இந்த விக்கிரவாண்டி வருகிறது. விழுப்புரத்தில் விசிக சார்பாகப் போட்டியிட்ட ரவிக்குமார் 72,188 வாக்குகளை இந்தத் தொகுதியிலிருந்து பெற்றுள்ளார்.
அதே போல் அதிமுக வேட்பாளர் 65 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். பாமக வேட்பாளர் 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். நாதக வேட்பாளர் மு.களஞ்சியம் வெறும் 8 ஆயிரம் வாக்குகளை மட்டுமே இங்கிருந்து பெற்றிருந்தார்.
இதில் பாமக வன்னியர்கள் வாக்குகளையே அதிகம் நம்பி இருக்கிறது. ஆனால், மற்றக் கட்சிகளுக்கு அந்த நெருக்கடி இல்லை. பாமக வன்னியர் வேட்பாளரை அறிவித்திருந்தாலும் திமுக வேட்பாளரும் அதே வகுப்பைச் சேர்ந்தவர்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
பாமக வேட்பாளர் இந்தத் தொகுதிக்கு புதியவர் இல்லை. அவர் 2016இல் ஏற்கெனவே போட்டியிட்டு 41,428 வாக்குகளைப் பெற்றவர். இந்த முறை அவர் டெபாசிட் வாங்குவது கூட கஷ்டம்தான்.
காரணம், ஆளும் கட்சியான திமுக 9 அமைச்சர்களைத் தொகுதிக்குள் இறக்கியுள்ளது. அது இல்லாமல் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர், எம். பி. ஜெகத்ரட்சகன் கூடுதலாகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே விக்கிரவாண்டியை வளைத்துப் போட்டுக் கண்காணித்து வருகின்றன.
பாமக தனது மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு இடைத்தேர்தலைச் சந்திக்கிறது. திமுகவோ 40க்கு 40 என்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு தேர்தலைச் சந்திக்கிறது.
இதில் நாதகவுக்காவது ஒரு ஆறுதலான செய்தி உள்ளது. அந்தக் கட்சி தனது அங்கீகாரத்தைப் பெற்று பிறகு சந்திக்கப் போகும் முதல் தேர்தல் இது. தர்மபுரி தொகுதியில் நாதக வேட்பாளராகக் களம் இறங்கிய 65 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர் அபிநயா. இப்போது அவர் சொந்த தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்கிறார். இவரும் வன்னியர் சமூகம் தான்.

ஆக, சாதியை மட்டுமே காரணமாகக் காட்டி பாமக வாக்காளர்களிடம் வலையை வீச முடியாது என்பது உறுதி. அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் 84,157 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
அந்த வாக்குகள் நிச்சயம் பாமகவுக்கு விழாது. காரணம், நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளுக்குள்ளான மோதல் முத்தி விட்டது. ஆக, அதிமுக ஓட்டுகள் ஒருவேளை திமுகவுக்குக் கூடப் போகலாம், பாஜக மற்றும் பாமகவுக்கு வராது.
ஆகவே, பாமக 13 ஆண்டு சபதம் இந்த விக்கிரவாண்டி தேர்தலில் என்ன மாற்றத்தை அல்லது முன்னேற்றத்தை அந்தக் கட்சிக்குத் தரப்போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications