விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு கடன் வழங்கும் முகாம்.. யாரெல்லாம் பங்கேற்கலாம்.. கலெக்டர் விளக்கம்
விழுப்புரம் : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்க சிறப்பு முகாம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியின் கிளைகளில் நடைபெற உள்ளது. இதில் யாரெல்லாம் பங்கேற்கலாம் என்பது குறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் ரூ.3 கோடியே 90 லட்சமும், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் ரூ.2 கோடியே 90 லட்சமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு கடன்கள் வழங்கப்பட உள்ளது.

விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் கடன் உதவி
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்க சிறப்பு முகாம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியின் கிளைகளில் நடைபெற உள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்
அதன்படி வருகிற 9-ந் தேதி விழுப்புரத்தில் உள்ள கூட்டுறவு நகர வங்கியிலும், 16-ந் தேதி திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கியிலும், 23-ந் தேதி செஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 23-ந் தேதி வீரபாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 6-ந் தேதி முகையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 13-ந் தேதி ஆற்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 20-ந் தேதி, செம்மேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், செப்டம்பா் 3-ந் தேதி கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 10-ந் தேதி விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அவலூர்பேட்டை கிளையிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
கடன் விண்ணப்பபம்
திட்டங்களுக்கான கடன் விண்ணப்பம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கியின் கிளைகளிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலும் கிடைக்கும். முகாமில் கலந்துகொள்ள வரும் முன்பே விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
என்ன ஆவணங்கள் தேவை
மனுவுடன் சாதிச்சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன்பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். எனவே இந்த கடன் முகாமில் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் (கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications