எனக்கா ஓட்டு போட்ட? டென்ஷன் ஆன பொன்முடி.. மரக்காணத்தில் சுற்றிவளைத்த இளைஞர்கள்!
விழுப்புரம்: மரக்காணத்தில் நல்ல மருத்துவமனை இல்லை என்று இளைஞர் ஒருவர் சொல்லும் போது எங்களுக்கு ஓட்டு போட்டியா? என்று அமைச்சர் பொன்முடி கேட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி இரவு விஷசாராயம் விற்கப்பட்டிருக்கிறது. மலிவு விலையில் விற்கப்பட்ட இந்த விஷச்சாராயத்தை பலர் வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தனர்.

இதேபோல் செங்கல் பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் பகுதியிலும் இதேபோன்று விஷ சாராயம் குடித்தவர்கள் மயங்கி விழுந்தனர்.
இந்த இரு சம்பவங்களிலும் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை வழங்குவதற்காக மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்திற்கு அமைச்சர் பொன்முடி , அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இன்று வருகை தந்தார்கள். அங்கு முதல்வர் அறிவித்த நிவாரண தொகையையும் பொதுமக்களுக்கு அமைச்சர் பொன்முடி வழங்கினார். பின்னர் அவர் காரில் ஏறினார். அப்போது காரில் இருந்த அமைச்சரிடம் பொதுமக்கள் குறைகளை கூறினார்கள். அப்போது அமைச்சர் பொன்முடியை பார்த்து பொதுமக்கள் , அய்யா மரக்காணத்தில் மக்களுக்கு சிகிச்சை பெற நல்ல மருத்துவமனை இல்லை என்றும், போதிய மருத்துவ வசதி இல்லை என்றும் முறையிட்டனர் விழுப்புரம் மாவட்டம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதாகவும் அங்கிருந்த இளைஞர் ஒருவர் கூறினார். இதனால் டென்ஷனான அமைச்சர் பொன்முடி , எங்களுக்கா ஓட்டு போட்டாய் என்று கேட்டபடி காரில் சென்று விட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ஓட்டு போட்டால் தான் செய்ய வேண்டும் என்று இல்லை என்று பதில் அளித்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. விழுப்புரம் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த செந்தில் குமார் வெற்றி பெற்ற நிலையில், அதை குறிப்பிடும் வண்ணம் ஓட்டு போட்டியா என்று அமைச்சர் பொன்முடி கேட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications