பெண்கள் ஒருமுறைக்கு இருமுறை பஸ்ல போறாங்க.. இலவச டிக்கெட்டே இதற்கு காரணம் - அமைச்சர் பொன்முடி
விழுப்புரம்: பெண்களுக்கு அரசுப் பேருந்தில் டிக்கெட் இலவசம் என்பதால் அனைவரும் ஒரு முறைக்கு இரு முறை பேருந்தில் பயணம் செய்து வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெண்ணெய் நல்லூர் பேரூராட்சியில் இன்று புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டு புதிய வணிக வளாக கட்டடத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, "கடந்த ஆட்சியிலேயே திருவெண்ணைநல்லூர் பகுதியில் ஒரு அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்தது திமுக. தற்போது திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் கடந்த ஓராண்டு காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் பேருந்தில் பயணம் செய்ய பெண்கள் கணவரிடம் காசு கேட்டீர்கள். ஆனால் இப்போது பெண்களுக்கு இலவச பயணம் என அரசு அறிவித்துள்ளது. அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்பதால் அனைவரும் ஒரு முறைக்கு இரு முறை பேருந்தில் பயணம் செய்து வருகிறார்கள்." என்றார்.

இந்த நிகழ்வுக்கு பின்னர் அங்கு விளையாடி கொண்டு இருந்த பள்ளி சிறுவர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி நன்றாக படிக்கவும் வேண்டும், விளையாடவும் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications