உன்னையும் கொன்னு எரிக்க ரொம்ப நேரம் ஆகாது.. மிரட்டிய அதிமுக எம்எல்ஏ.. மாவட்ட கவுன்சிலர் பரபர புகார்!
விருதுநகர்: அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ், "உன்னையும் எரித்துக் கொல்வதற்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது" என கொலை மிரட்டல் விடுத்ததாக, சொந்தக் கட்சியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலரே போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட 3வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கணேசன். அதிமுகவை சேர்ந்தவர். இவர் நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ் மனைவி வசந்தி, விருதுநகர் மாவட்ட சேர்மனாக உள்ளார். இந்நிலையில், எனது வார்டு பணிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிதி ஒதுக்கவில்லை. எனவே, நிதி ஒதுக்குமாறு மாவட்ட கவுன்சில் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

இதன் காரணமாக, மாவட்ட சேர்மன் வசந்தியும், அவரது கணவரான எம்.எல்.ஏ மான்ராஜும் என்னை மிரட்டி வந்தனர். இந்நிலையில், என்னை செல்போனில் அழைத்த மான்ராஜ், அடுத்த கூட்டத்தில் உனது வார்டுக்கு ஒன்றும் செய்யவில்லை, நிதி ஒதுக்க வேண்டும் என்று பேசினால் கூட்டத்தில் வைத்தே உன்னைக் கொன்று புதைத்து விடுவேன். ஏற்கனவே கேரளாவைச் சேர்ந்தவர்கள் இருவரை எரித்துக் கொன்றது போல, உன்னையும் எரித்துக் கொல்வதற்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது.
உன்னைக் கொன்றாலும் கேட்பதற்கு நாதியில்லை. என்னை எவனும் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டினார். உங்கள் மனைவிதானே சேர்மன், நீங்கள் எதற்கு பேசுகிறீர்கள் எனக் கேட்டதற்கு, என் மனைவிக்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவார்கள்? அனாதைப் பயலே என்றெல்லாம் கடுமையாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
மான்ராஜ் மிரட்டி வருவதால் பயத்தில் இதயநோய் ஏற்பட்டு ஆஞ்சியோ செய்துள்ளேன். மீண்டும் கொலை மிரட்டல் விடுத்திருப்பதால் எனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். எனக்கோ, என் சகோதரர் செல்வம் குடும்பத்தினருக்கோ என்ன நடந்தாலும் அதற்கு மான்ராஜும், அவரது மனைவி வசந்தியும் தான் பொறுப்பு. எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என போலீசாரிடம் அளித்துள்ள புகாரில் கோரியுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவியான அதிமுக மாவட்ட சேர்மன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக மாவட்ட கவுன்சிலரே புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மான்ராஜ் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். சொந்தக் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி பற்றி ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் மான்ராஜ் பேசிய ஆடியோ கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications