தமிழகத்தில் பாஜக காலூன்ற கார்ப்பரேட்கள் உதவி ! முழு பக்க விளம்பரத்தை கூறி வியந்த மாணிக்கம்தாகூர்!
விருதுநகர்: தமிழகத்தில் பாஜக காலூன்ற கார்ப்பரேட்கள் பொருளாதார ரீதியாக உதவிவருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தெரிவித்திருக்கிறார்.
மிகப்பெரிய பணபலத்துடன் தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என பாஜக துடித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அன்று அனைத்து நாளிதழ்களிலும் பாஜக முழு பக்கம் விளம்பரம் கொடுத்தது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருப்பதாக கூறினார்.

மதவெறி அரசியல்
தமிழகத்தில் மதவெறி அரசியலை திணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாஜக, நேற்று நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கோரி வாக்காளர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை பணம் கொடுத்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

பாஜக பின்னணியில்
பாஜகவின் பின்னணியில் உள்ள பணபலமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் உதவியும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தாம் கருதுவதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் பாஜக முழு பக்க விளம்பரம் கொடுத்தது தமக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

பாஜக முயற்சி
பாஜக என்னதான் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டாலும் நாளை மறுதினம் வெளியாகும் தேர்தல் முடிவுகள் மூலம் அவர்களின் பலம் தெரியவரும் என தெரிவித்தார் மாணிக்கம் தாகூர் எம்.பி. மேலும், மத்திய அரசின் அதிகாரத்தை நம்பி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டதாகவும் தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பெற பாஜக துடித்து வருவதை அறியமுடிவதாகவும் அவர் கூறினார்.

பிரச்சாரம்
இதனிடையே திமுக, அதிமுகவுக்கு சளைக்காமல் மாநிலம் தழுவிய அளவில் அண்ணாமலை இந்த தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டதும் அதேபோல் விளம்பரம் விவகாரத்தில் ஆளுங்கட்சியான திமுகவுடன் சரிக்கு சரியாக போட்டிபோட்டதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications